'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம், இந்தாண்டு மார்ச் மாதம் வெளியாகி பெரும் சர்ச்யை கிளப்பியிருந்தது. 1990களில் காஷ்மீர் பண்டிதர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.


இதில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் விதமான கருத்துகள் இடம்பெற்றதாக நடிகர்கள், இயக்குநர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் விமர்சித்திருந்தனர். இந்த திரைப்படத்தை திரையிடுவதற்கு பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டு, பல்வேறு பாஜக தலைவர்கள் திரைப்படத்திற்கு ஆதரவான கருத்து தெரிவித்திருந்தனர்.


இச்சூழலில், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடுவதற்கு இந்த படம் அனுமதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, விழாவின் கடைசி நாளன்று பேசிய கோவா சர்வதேச திரைப்பட விழாவின் நடுவரும் இஸ்ரேல் இயக்குநருமான நடவ் லாபிட், பிரச்சார நோக்குடன் 'தி காஷ்மீர் பைல்ஸ்' எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது ஒரு கீழ்த்தரமான படம் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்தது பெரும் விவாத்தை கிளப்பியது.


'தி காஷ்மீர் பைல்ஸ்' குறித்து விரிவாக பேசிய லாபிட், "காஷ்மீரி பண்டிதர்களின் துயரத்தை மறுக்கவில்லை. ஆனால், திரைப்படம் எடுக்கப்பட்ட விதம் குறித்தே கருத்து தெரிவித்தேன். அந்த துயரத்தை அடிப்படையாக வைத்து சீரியசான படம் எடுக்க வேண்டும்" என்றார்.


இதனை தொடர்ந்து, கோவா சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியரான சுதிப்தோ சென், தனது தனிப்பட்ட கருத்தையே லாபிட் தெரிவித்துள்ளதாக கூறினார். ஆனால், இது தன்னுடைய தனிப்பட்ட கருத்து இல்லை என்றும் நடுவர்களின் ஒருமித்த கருத்தும் அதுவே என்றும் லாபிட் விளக்கம் அளித்திருந்தார். 


இந்நிலையில், நடுவர் பட்டியலில் இடம்பெற்ற மற்ற நடுவர்களும் லாபிட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். நடுவர்கள் ஜின்கோ கோடோ, பாஸ்கேல் சாவன்ஸ் மற்றும் ஜேவியர் அங்குலோ பார்டுரன் ஆகியோர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாபிட் தெரிவித்த கருத்துக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ளனர்.


நடுவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழாவின் நிறைவு விழாவில், நடுவர் மன்றத்தின் தலைவர் நடவ் லாபிட், நடுவர் மன்ற உறுப்பினர்கள் சார்பாக வெளியிட்ட அறிக்கையில், '15வது படமான தி காஷ்மீர் பைல்ஸ், ஒரு கீழ்த்தரமான பிரச்சார நோக்குடன் எடுக்கப்பட்ட படமாக நாங்கள் உணர்ந்ததால், எங்கள் அனைவருக்கும் கலக்கமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.


அத்தகைய மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலைப் போட்டிப் பிரிவுக்கு பொருத்தமற்ற திரைப்படம் அது. ' அவரது கூற்றில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். படத்தின் உள்ளடக்கத்தில் நாங்கள் அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவில்லை, கலைநயமிக்க அறிக்கையையே வெளியிட்டோம்.


மேலும் விழா மேடையை அரசியலுக்காகப் பயன்படுத்துவதையும், அதைத் தொடர்ந்து லாபிட் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அது ஒருபோதும் நடுவர் மன்றத்தின் நோக்கமல்ல" என குறிப்பிட்டுள்ளனர்.