பிரபல உணவு விமர்சகரான இர்ஃபான், தனது யூட்யூப் சேனல் மூலம் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிநாடு உணவுகளையும் சுவைத்து ரிவ்யூ தெரிவித்து வந்த அவரை நிறையப் பேர் பின்பற்றி வந்தனர். இந்நிலையில், யூட்யூப் நிறுவனத்தின் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் அவரது யூட்யூப் சேனல்  முடக்கப்பட்டது. இதனால், அவரது ஃபாலோவர்ஸ் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 


யூடியூப் பக்கம் முடக்கப்பட்டது குறித்து தனது பர்சினல் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் ஸ்டோரி பதிவிட்ட அவர், ”திடீரென யூட்யூப் எங்களது சேனலை ஏன் நீக்கியது என தெரியவில்லை.. இதை சரிசெய்ய பார்த்து கொண்டிருக்கோம்” என தெரிவித்தார்.  மேலும், தனது இன்னொரு  யூட்யூப் சேனலில் இருந்து வீடியோ பதிவேற்றிய அவர், ”கடந்த 5-6 ஆண்டுகளாக இந்த யூட்யூப் சேனலுக்காக பணியாற்றி வருகிறோம். ஆனால், இப்போது விதிமுறைகளை மீறி இருப்பதாக யூட்யூபில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இனி, மீண்டும் இந்த சேனல் கிடைக்குமா அல்லது வேறு சேனல் ஆரம்பிக்க வேண்டுமா என்பது விரைவில் தெரிய வரும். பழைய சேனலை மீட்டு விடலாம் என பலரும் சொல்லி வருவது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால், சரியாக என்ன பிரச்னை என தெரியாமல் என்னால் இப்போது எதும் சொல்ல முடியவில்லை. 48 மணி நேரத்திற்கு நம்மால் எதுவும் சொல்ல முடியாது. கிட்டத்தட்ட 1500-க்கும் அதிகமான வீடியோக்கள் அந்த சேனலில் இருக்கிறது. அவற்றில் சிலது பேக்-அப் கூட என்னிடம் இல்லை” என தெரிவித்திருந்தார்.



மீண்டும் யூடியூப்..


இந்நிலையில் இர்ஃபான் வியூ என்ற பக்கம் மீண்டும் யூடியூபில் வந்துள்ளது. We're Back என்ற வீடியோவை பதிவிட்டு இர்பான் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில், யூடியூப் பக்கம் நீக்கம் தொடர்பாக கூகுள்நிறுவனத்துக்கு தொடர்ந்து விளக்கம் அளித்தோம். பின்னர் பதில் அளித்த யூடியூப் முறையாகவே விதிகள் கடைபிடிக்கப்பட்டதாகவும், எந்த சிக்கலும் இல்லை என்றும் விளக்கம் அளித்து இர்ஃபான் வியூ என்ற பக்கம் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.