பா.ரஞ்சித்


தமிழ் படங்களிலும் சரி, தமிழ் சினிமாத் துறையிலும் சரி இரண்டிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் பா.ரஞ்சித். ஆதிக்க சமூகத்தை சேர்ந்த நாயகர்கள், அவர்களின் உயர்ந்த குணங்கள் என நாயக பிம்பத்தை உருவாக்கி வந்த பல வருட சினிமா வரலாற்றில், விளிம்புநிலை சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் கதைகளைப் பேசியவர். அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா என தனது அரசியலை பல்வேறு வெவ்வேறு கதைக்களங்கள் மூலமாக தொடர்ந்து அணுகி வருகிறார். 


தங்கலான்


தற்போது விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் தங்கலான். ஸ்டுடியோ கிரீன் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


கடந்த ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அகில இந்திய அளவில் இப்படத்திற்கான ப்ரோமோஷன்களை படக்குழு திட்டமிட்டு வருவதால் இந்தத் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஒருபக்கம் தங்கலான் படத்தின் ரிலீஸை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துவரும் நிலையில், பா.ரஞ்சித் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன,,


வேட்டுவம்






தங்கலான் படத்தைத் தொடர்ந்து பா ரஞ்சித் வேட்டுவம் என்கிற படத்தை இருக்கிறார். அட்டக்கத்தி தினேஷ் இப்படத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், ஆர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் அசோக் செல்வனும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கேங்ஸ்டர் டிராமாவாக இப்படம் உருவாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கலான் படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இப்படத்திற்கு அடுத்தபடியாக ரஞ்சித் ஆர்யா நடிக்கும் சார்பட்டா இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.