தங்கலான்


ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. தங்கலான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் வந்தாலும், வசூல் ரீதியாக படம் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. 


பா ரஞ்சித் முன்னதாக இயக்கிய சார்பட்டா பரம்பரை ஓடிடியில் வெளியானது அடுத்தபடியாக  வெளியான நட்சத்திரம் நகர்கிறது படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல் சியான் விக்ரம் நடித்த கோப்ரா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ரஞ்சித் மற்றும் விக்ரம் ஆகிய இருவருக்கும் வெகுஜன ரீதியாக வெற்றிப்படம் தேவையாக இருக்கும் சூழலில் வெளியாகி இருக்கும் படம்தான் தங்கலான்


பட்டியலின மக்கள் பூர்வ பெளத்தர்கள் என்று முன்வைத்த அயோத்தி தாசரின் வரலாற்றாய்வுகளை அடிப்படையாக கொண்டு தங்கலான் படத்தின் கதையை அமைத்துள்ளார்கள் ரஞ்சித் , தமிழ் பிரபா மற்றும் அழகிய பெரியவன். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் கோலார் தங்க வயல்களில் இருந்த தங்கத்தை எடுக்க அங்கு வாழ்ந்த பழங்குடியின மக்களின் போராட்டங்களையும் அம்மக்களின் வாய்மொழிக் கதைகளை இணைத்து மேஜிக்கல் ரியலிஸம் ஜானரில் இப்படத்தை எடுத்துள்ளார்கள். 


தங்கலான் படத்தில் ரசிகர்கள் அனைவரையும் அதிகம் கவர்ந்த அம்சம் என்றால் சீயான் விக்ரமின் நடிப்பு. இதற்கு முன்பு தான் நடித்த 60 படங்களின் எந்த சாயலும் இல்லாமல் இப்படத்தில் விக்ரம் நடித்துள்ளார்


தங்கலான் வசூல் 


தங்லான் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 26 கோடி வசூலித்துள்ளது. முதல் வாரத்திற்குள்ளாக தங்கலான் 50 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ரசிகர்கள் இப்படத்திற்கு கொடுத்த வரவேற்புக்கு நடிகர் விக்ரம் நன்றி தெரிவித்திருந்தார். 


தங்கலான் 2






படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் ஹைதராபாதில் ரசிகர்களுடன் படம் பார்க்க சென்றுள்ளார்கள். அப்போது பத்திரிகையாளரை சந்தித்த நடிகர் விக்ரம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் இயக்குநர் ரஞ்சித்தும் சேர்ந்து தன்னிடம் ஒரு தகவலை பகிர்ந்துகொள்ள சொன்னதாக கூறினார்.


தங்கலான் படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்திருப்பதால் தங்கலான் 2-ஆம் பாகத்திற்கான வேலைகளை விரைவில் தொடங்க இருப்பதாக விக்ரம் தெரிவித்துள்ளார்.