இக்கட்டான கொரோனா காலக்கட்டத்தில் பல குடும்பங்கள் வேலையிழந்து ஒரு வேளை உணவிற்கே சிரமப்பட்டு வருகிறனர். இதனை கண்ட பல திரைப்பிரபலங்கள் தங்களால் ஆன அடிப்படை உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு முன்னணி நடிகர் ராணா டகுபதி, பழங்குடியின மக்களுக்கு தேவையான  மளிகை மற்றும் மருந்து பொருட்களை வழங்கியுள்ளார்.


ராணாவின் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் ”விராட பருவம்”. இந்த படத்தில் ராணா வனத்துறை அதிகாரியாக நடிக்க இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். படமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனோ இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பே தள்ளிப்போனது. இந்நிலையில் படத்தின் சில காட்சிகள் மும்மரமாக எடுத்துவரும் படக்குழு, விரைவில் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.



இந்த நிலையில் வனத்துறை அதிகாரி ராணாவின் காட்சிகளில் சில  தெலுங்கானா மாநிலத்தின் நிர்மல் என்னும் பழங்குடியின குடியிருப்பு பகுதியில் நடந்துவருகிறது. ஏற்கனவே அங்கு காட்சிகள் எடுக்கப்பட்டபோதே அங்குள்ள மக்களுடன்  நெருங்கி பழகியுள்ளார் ராணா. தற்போது அங்கு படப்பிடிப்பில் உள்ள ராணா, கொரோனா சூழல் காரணமாக அடிப்படை தேவைகளுக்காக  ஆதிவாசி மக்கள்  சிரமப்படுவதை அறிந்து, தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியுள்ளார். நிர்மல் கிராமத்தில் வசிக்கும் 400 பழங்குடியின குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள் , உணவு பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஷூட்டிங் சென்ற இடத்தில் ராணா செய்த இந்த உதவிக்கு திரைப்பிரபலங்கள் , ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.




இது ஒருபுறம் இருக்க  ராணாவின் மனைவி மிஹீகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”காதலுக்கு ஓக்கே சொல்லி ஒரு வருசம் ஆச்சா“ என புகைப்படத்துடன் கூடிய ஒரு வருட மெமரி
  ஒன்றினை பகிர்ந்துள்ளார். அது கடந்த ஆண்டு இதே நாளில் ராணா “அவள் என் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டாள்” என பகிர்ந்த புகைப்படம்தான்.  இதனை  தற்போது பகிர்ந்த மிஹீகா “நான் வாழ்க்கையில் எடுத்த ஒரு நல்ல முடிவு அது! அதற்குள்ளாக ஒருவருடம் ஆகிவிட்டது, என்னிடம் காதலை சொன்னதற்கு நன்றி ராணா , ஐ லவ் யூ“ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த ஜோடி அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களை  ரசிப்பதற்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது தெரியுமா?