விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான தொடர் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai). ஏழை மருமகளையும், பணக்கார வீட்டு மருமகளையும் வேறுபாட்டுடன் நடத்தும் மாமியார், ஏழை பெண்ணுக்கு ஆதரவாக இருக்கும் அவளின் கணவன் மற்றும் மாமனார் என இவர்களை சுற்றி நடைபெறும் இந்த கதைக்களம் கொண்ட சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை சீரியலின் தொடக்கம் முதல் பெற்று வருகிறது. 


 



சிறகடிக்க ஆசை:


கடந்த சில நாட்களாக சிறகடிக்க ஆசை சீரியல் மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல பல நாட்களாக வேலைக்கு போகிறேன் என சொல்லி பார்க்கில் போய் பொழுதை கழித்து வந்த மனோஜ், முத்துவிடம் வசமாக மாட்டிக் கொள்கிறான். முத்து மனோஜ் வேலையில்லாமல் பார்க்கில் செய்யும் வேலைகள் அனைத்தையும் வீடியோவாக வீட்டில் உள்ளவர்களிடம் போட்டு காட்ட அதை பார்த்து ரோகினி அதிர்ச்சி அடைகிறாள். 


இது ஒரு பக்கம் என்றால் ரோகினி தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்து கல்யாணம் செய்து கொள்கிறாள். தான் ஒரு பணக்கார வீட்டு பெண் என்றும், அவளின் அப்பா மலேசியாவில் மிகப்பெரிய பிசினஸ்மேன் என்றும் அடுக்கடுக்காக பொய் சொல்லி தான் மாமியாரை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தாள். இந்த உண்மை என்று வெளிவரும். அவள் எப்போது மாட்டிக்கொள்வாள் என மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.


 



அந்த வகையில் அதற்கு அடிகோல் காட்டும் விதமாக புதிதாக ஒரு கேரக்டராக சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான 'திருமதி செல்வம்' சீரியலில் ஹீரோவின் அப்பா பூங்காவனமாக நடித்த நடிகர் ஜெயமணி தான் இந்த சீரியலில் புதிய கேரக்டராக என்ட்ரி கொடுக்க போகிறார்.


ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் பொங்கல் சீர் கொண்டு வந்து கொடுக்க அதை பார்த்த விஜயா, ரோகிணியிடம் அவளின் அப்பாவையோ அல்லது மாமாவையோ ஒரு முறை வீட்டுக்கு வர சொல்லி சொல்கிறார். அப்படி செய்தால் தான் முத்து மீனாவின் வாயை அடைக்க முடியும் என சொல்கிறார் விஜயா. என்ன செய்வது என தெரியாமல் மீனாவின் தம்பியின் நண்பன் சிட்டியிடம் வட்டிக்கு ஒரு லட்சம் பெற்று அதை வைத்து கறிக்கடைகாரர் ஒருவரை மாமாவாக நடிக்க பிளான் செய்கிறாள் ரோகிணி. 


கறிக்கடைக்காரராக நடிகர் ஜெயமணியின் என்ட்ரி காட்சியே மிகவும் அசத்தலாக இருக்கிறது. அவர் மூலம் தான் ரோகினியின் உண்மையான முகம் வெளிப்பட போகிறது. முத்துவிடம் சீக்கிரமே ரோகிணி சிக்கி கொள்ள போகிறாள் என்பது ரசிகர்களிடன் யூகமாக இருக்கிறது.