இயற்கையாகவே எந்த வகையான உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பெண்களுக்கு  ஆரோக்கியம் அதிகம் என நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர் தெரிவித்த வீடியோ வைரலாகியுள்ளது. 


நீயா நானா நிகழ்ச்சி


விஜய் டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். கோபிநாத் இந்த நிகழ்ச்சியை  பல ஆண்டுகளாகவே தொகுத்து வழங்கி வரும் நிலையில் இதில் பகிரப்படும் கருத்துகள்  மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தும். ஒவ்வொரு வாரம் ஒரு தலைப்பில் விவாதம் நடைபெறும். அந்த வகையில் இந்த வாரம் “சோம்பேறி கணவர் vs பிட்னெஸ்ஸை விரும்பும் மனைவி” என்ற பெயரில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது 


இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் அருண் குமார் என்பவர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “இயற்கையாகவே மனிதர்கள் உள்ளிட்ட எந்த வகையான உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் சரி பெண்களுக்கு தான் ஆரோக்கியம் அதிகம். அதேசமயம் ஆண்களை விட பெண்களுக்கு தான் ஆயுளும் அதிகம். தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்களுக்கு 70 ஆண்டுகள் ஆயுட்காலம் என்றால் பெண்களுக்கு 75 ஆண்டுகளாக உள்ளது. தமிழ்நாடு கிட்டதட்ட அமெரிக்கா நாட்டுக்கு நிகரானது. சுதந்திரம் அடைந்தபோது இது தலைகீழாக இருந்தது.



1980களில் தான் இந்த மாற்றம் தொடங்கியது. பெண்கள் எதுவுமே பண்ணாவிட்டாலும் ஆரோக்கியமாகவே இருப்பார்கள்.100 வயதுக்கு மேல் இருக்கக்கூடியவர்களை எடுத்துக் கொண்டால் 10ல் ஒன்பது பேர் பெண்களாகவே இருப்பார்கள். அதேசமயம் ஆண்களுக்கு பெண்களை விட உடல்நலப்பிரச்சினைகள் ஏற்படுவது இயற்கையாவே அதிகம் என்பதால் கணவரின் உடல்நலத்தில் இருக்கும் மனைவிகளின் பயம் நியாயமானது தான். இதுதொடர்பாக இந்திய அரசு ஆய்வில், தினமும் கீரை சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை 2016ஐ ஒப்பிடுகையில் 2021ல் குறைந்து விட்டது. 30 ஆயிரம் பேரிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டது. 


அதேசமயம் பெண்களுக்கான உடல் பருமன் 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக கூடியிருக்கிறது. சில மாவட்டங்களில் 50 சதவிகித பெண்கள் உடல் பருமனுடன் உள்ளனர். இதில் முதல் இடத்தில் கன்னியாகுமரி உள்ளது. ஆரோக்கியம் பற்றிய அடிப்படை புரிதல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. உடல் ரீதியாக, மனரீதியாக, சமூக ரீதியான பழக்கம் பொறுத்து தான் ஆரோக்கியம் என்பது உள்ளது. இவை எல்லாம் இருக்கும் ஊரில் 100 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.