விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (அக்.27) எபிசோடில் பாக்கியா, அமிர்தா மற்றும் செல்வி கிச்சனில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது பாக்கியாவுக்கு அங்காளம்மன் கோயில் தர்மகர்த்தா போன் செய்கிறார். கோயிலில் திருவிழா இருப்பதாகவும் அதற்கான சமையல் ஆர்டரை பாக்கியலட்சுமிக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளதாகவும் சொல்ல பாக்கியா மிகவும் சந்தோஷப்படுகிறாள். நிச்சயம் நான் இந்த ஆர்டரை எடுத்து கொள்கிறேன் என சொல்லி திருவிழா நடக்கும் தேதி குறித்த விவரங்களை கேட்டு தெரிந்து கொள்கிறாள். பாக்கியாவுக்கு நம்பிக்கை வருகிறது.






ரூமில் செழியன் குழந்தையை கொஞ்சி விளையாடுவதைப் பார்த்த ஜெனி "பாப்பாவை மட்டும் தான் இப்படி எல்லாம் கொஞ்சுவியா? என்னை எல்லாம் கொஞ்ச மாட்டியா?" எனக் கேட்க, செழியனும் ஜெனியும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.


அந்த நேரம் பார்த்து மாலினி செழியனுக்கு போன் செய்கிறாள். "நான் போனை எடுக்க போவதில்லை" என செழியன் ஜெனியிடம் சொல்கிறான். போனை எடுக்காததால் மாலினி வாய்ஸ் மெசேஜ் ஒன்று அனுப்புகிறாள். அதைக் கேட்டு அதிர்ச்சியான செழியன் ஜெனி தூங்கிய பிறகு மெதுவாக மாலினியை பார்ப்பதற்காக கீழே இறங்கி செல்கிறான்.


அவனை மடக்கிய பாக்கியா "இந்த நேரத்தில் எங்க போற?" என விசாரிக்க செழியன் எதை எதையோ சொல்லி சமாளிக்கிறான். "அந்த மாலினி எக்காரணத்தைக் கொண்டும் உன்னோட வாழ்க்கையிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு விஷயத்திலோ வரவே கூடாது" என செழியனை எச்சரித்து மாடிக்கு அனுப்பி வைக்கிறாள் பாக்கியா.



அடுத்த நாள் காலை மறுபடியும் மாலினி செழியனுக்கு மாறி மாறி போன் செய்துகொண்டே இருக்கிறாள். எரிச்சல் அடைந்த செழியன் போனை எடுத்துப் பேச, "மறந்து போய் வீடியோ ஒன்றை ஜெனிக்கு அனுப்பி வைத்துவிட்டேன்" என மாலினி சொல்ல செழியன் "என்ன வீடியோ?" என அதிர்ச்சி அடைகிறான். பதறிப் போன செழியன் தலை கால் புரியாமல் வேகவேகமாக மாடிக்கு ஓடி போய் பார்க்க "மாலினி ஏதோ வீடியோ அனுப்பி இருக்காங்க. இரு நான் ஓபன் பண்ணி பாக்குறேன்" என ஜெனி சொல்லி ஓபன் செய்து பார்த்தால் ஏதோ ரைம்ஸ் வீடியோ. அதற்கு பிறகு தான் செழியன் நார்மல் ஆனான்.

ஈஸ்வரியும் கோபியும் பேசிக்கொண்டு இருக்கும் போது ராதிகா கோபிக்கு போன் செய்கிறாள். இங்கேயே இருந்து பேசு என ஈஸ்வரி சொல்ல கோபி ராதிகாவின் போனை அட்டென்ட் பண்ணி பேசுகிறார். ராதிகா கோபியை நலம் விசாரிக்கிறாள். "நேத்து நைட் நல்லா தூங்குனீங்களா?" என ராதிகா கேட்க "நல்லா தூங்குனேன்" என கோபி செல்கிறார். "என்னைப் பத்தி உங்களுக்கு கவலையே இல்லல. உங்க அம்மாவ பக்கத்துல வச்சுக்கிட்டு தான் பேசுவீங்களா?" என ராதிகா சண்டைபோட, ஃபோனை கோபியிடம் இருந்து பிடுங்கி ஈஸ்வரி ராதிகாவை திட்டு காலை கட் செய்து விடுகிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.