சின்னத்திரை என்றாலே அதில் முன்னணி வகிக்கும் சன் டிவியின் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் என்றுமே மாபெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த தொடர் 'எதிர்நீச்சல்'. கடந்த ஜூன் 8ம் தேதியுடன் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. தற்போது எதிர்நீச்சல் குறித்த சர்ப்ரைஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


 



 


பெண்களை மற்றும் கவராமல் ஏராளமான ஆண் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது எதிர்நீச்சல் தொடர். அதுமட்டுமின்றி ஒரு சில பிரபலங்களும் தவறாமல் இந்த தொடரை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளனர். அந்த அளவுக்கு ஸ்வாரஸ்யமான கதைக்களத்துடன் சீரியலை நகர்த்தி வந்தார் இயக்குநர் திருச்செல்வம். பெண்களை அடிமைகளாக நடத்தும் குடும்பத்தில் மூத்தவராக ஆதி குணசேகரன் என கதாபாத்திரத்தை சுற்றியே கதை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக பொருந்தி நடித்திருந்தார் நடிகர் மாரிமுத்து. ஆனால் அவரின் எதிர்பாராத இழப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் சீரியல் குழுவினரையும் நிலைகுலைய வைத்தது. 


நடிகர் மாரிமுத்து நடித்து வந்த கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்தார். அவர் எதிர்நீச்சல் சீரியலில் நுழைந்த பிறகு கதைக்களம் ஒட்டுமொத்தமாக மாறியது. பெரிய அளவில் அது ரசிகர்களின் கவனத்தை பெற தவறியது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்நீச்சல் சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்து வந்தது. 


 



ஏற்கனவே பல நேர்காணல்களில் இயக்குநர் திருச்செல்வம் கூறுகையில் 5 ஆண்டுக்கான கதையை தயாராக உள்ளது என தெரிவித்து இருந்தார். ஆனால் சேனல் கதையை மாற்றி அமைத்து விரைவில் முடிக்க சொல்லி இயக்குநருக்கு பிரஷர் கொடுத்துள்ளது. இதனால் தான் குணசேகரன் கதாபாத்திரம் செய்த அனைத்து தவறுகளுக்காகவும் ஜெயிலுக்கு அனுப்பப்படுவதாக கதையை மாற்றி பெண்கள் அனைவரும் எதிர்நீச்சல் போட்டு அவர்களின் பயணத்தை இனிதே துவங்குவது போல கதை முடிக்கப்பட்டது. 


இந்த உண்மையை அறிந்து கொண்ட பிரபல தொலைக்காட்சி சேனலான கலைஞர் டிவி, எதிர்நீச்சல் தொடரை கலைஞர் டிவியில் தொடர இயக்குநர் திருச்செல்வதை அணுகியதாக கூறப்படுகிறது. இந்த இரண்டாவது சீசனில் சக்தி கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அதிகாரபூர்வமான தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


அதே நேரத்தில் சன் டிவியில்  'மெட்டி ஒலி', 'நாதஸ்வரம்' உள்ளிட்ட மெகா ஹிட் சீரியல்களை இயக்கிய இயக்குநர் திருமுருகனிடம், எதிர்நீச்சல் போன்ற ஒரு விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட சீரியலை இயக்க கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. அதனால் விரைவில் திருமுருகனின் சீரியல் ஒன்றும் சன் டிவியில் ஒளிபரப்பாக வாய்ப்புகள் உள்ளன. இந்த தகவல்கள் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக உள்ளது.