கொண்ட்டாடமும் கோலாகலமுமாகத் துவங்கி நடந்து வரும் சூப்பர் சிங்கர் சீனியர் 10 வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வாரம் பார்க்கும் அனைவரையும் நெகிழ வைக்கும்படியான அற்புதமான சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. எளிய பின்னணியிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானா பாடகர் சேட்டுவிற்கு சினிமா வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். 


சூப்பர் சிங்கர் 


சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் நிகழ்ச்சியிலும் அந்நிகச்சி இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்னதாகவே இசையமைப்பாளர் தமன் பல ஜூனியர் பங்கேற்பாளர்களுக்கு சினிமா வாய்ப்பினை அளித்தார். அதே போல் இப்போது சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில்  இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆரம்பகட்டத்திலேயே, ஒரு பங்கேற்பாளருக்கு  சினிமா வாய்ப்பை உறுதி செய்திருப்பது எல்லோரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


தமிழகத்தில் இசைத்துறையில் புதிய புரட்சியை உருவாக்கிய, சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன், தற்போது துவங்கி  கோலாகலமாக நடந்து வருகிறது. பல அற்புத திறமையாளர்களின் பங்களிப்பில்,  ஒவ்வொரு வாரமும் பல  நெகிழ்வான சம்பவங்களால் நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. 


மிக எளிய பின்னணியிலிருந்து வந்த கானா பாடகர் மணிகண்டன் எனும் கானா சேட்டு,  கடந்த  வாரம் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இறப்பு நிகழ்ச்சிகளில் கானா பாடியும், ஓட்டலில் சர்வராகவும் கனவைச் சுமந்து கொண்டு, வாழ்க்கையில் போராடி வரும் கானா சேட்டுவின் கதை, அனைவரையும் உருக வைத்தது. தனக்குப் பிறந்த மகன் எந்த கஷ்டமும் படக்கூடாது என்று, இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளதாக அவர் கூறியது அனைவரது கண்ணிலும் கண்ணீர் வர வைத்தது. 


கடந்த வார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானா சேட்டு, கானா பாடலில் வித்தியாசமாக, பக்திப்பாடல் ஒன்றை அற்புதமாகப் பாடி அனைவரையும் திரும்பி வைத்தார். அவரது பாடலைக் கேட்ட  நீதிபதிகள் அனைவரும் இணைந்து, கானா சேட்டின் குடும்பத்தை மேடையேற்றி அழகு பார்த்ததுடன், பரிசுகள் தந்து, அவரது மகனுக்கு தீட்சன் எனப் பெயரிட்டது, ஒரு நெகிழ்ச்சி சம்பவமாக அமைந்தது.  இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தான் இசையமைக்கும் படத்தில் கானா சேட்டுக்கு பாடும் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். எதிர்பாராத இந்த சர்ப்ரைஸால் கானா சேட்டு  மகிழ்ச்சியோடு நன்றி கூறினார். 


கானா பாடகருக்கு சினிமா வாய்ப்பு


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், இறுதிக்கட்ட வெற்றியாளர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்பதைத் தாண்டி, ஆரம்பத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு பங்கேற்பாளருக்குக் கிடைத்தது அனைவரையும் வியக்கவைத்த அற்புத தருணமாக அமைந்தது. 


தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில்,  பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி,  தமிழ் இசை உலகில் இந்நிகழ்ச்சி  மிகப்பெரும்  மாற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது.   எளிய பின்னணியிலிருந்து,  இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பல திறமையாளர்கள்,  சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும்  பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் பலர் ஜொலித்து வருகின்றனர்.


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், 10 வது சீசன்  துவங்கி நடந்து வரும் நிலையில், இந்நிகழ்ச்சி ஆரம்பக் கட்டத்திலேயே பல நெகிழ்ச்சி சம்பவங்களால் பார்வையாளர்களின் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. இந்நிகழ்ச்சியில்  பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்  ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள்.  பல திறமையாளர்களுக்கான அடையாளமாகத்  திகழும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இந்த 10 வது சீசனிலும் களைகட்டி வருகிறது.