சின்னத்திரையின் ராஜாவாக காலம்காலமாக இருந்து வரும் சேனல் சன் டிவி. அந்த வகையில் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றுமே ரசிகர்களுக்கு மிகவும் ஸ்பெஷல். அப்படி பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான பிரபலமான மெகா தொடர்களை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருவது தான் அதற்கு சாட்சி. அந்த பட்டியலில் தற்போது இணைய உள்ளது அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பான சின்னத்திரையின் பாசமலர் 'வானத்தை போல' சீரியல். 


 


கடந்த டிசம்பர் 2020ம் ஆண்டு தொடங்கிய 'வானத்தை போல' சீரியல் கடந்த நான்கு ஆண்டுகளாக இன்று வரை சின்னத்தை ரசிகர்களின் அபிமான தொடராக இருந்து வருகிறது. இந்த சீரியலின் ஹீரோ ஹீரோயின் மட்டுமின்றி பல கதாபாத்திரங்களும் மாறி இருந்தாலும் அதற்கு கிடைத்த வரவேற்பு குறையவே இல்லை. ஸ்ரீ குமார், கார்த்தி, மகாநதி சங்கர், செந்தில்குமாரி, மான்யா ஆனந்த், சாந்தினி பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். 


 



 


விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த 'வானத்தை போல' தொடர் இடையில் கதைக்களம் வேறு ட்ராக் நோக்கி நகர்ந்ததால் சற்று ஸ்வாரஸ்யம் இழந்தது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் சில சறுக்கல்கள் இருந்தான்.  ஆனால் நடிகர் சஞ்சீவ் கேரக்டர் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிறகு கதைக்களம் மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. மீண்டும் பழைய ட்ராக் திரும்பியதால், டிஆர்பி ரேட்டிங் வரிசையிலும் முன்னேறி வந்ததுடன் முதல் ஐந்து இடத்துக்குள் தக்க வைத்து வருகிறது. 


 


இந்நிலையில் தான் 'வானத்தை போல' சீரியல் முடிவுக்கு வர போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஸ்ரீ குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீரியல் குழுவினருக்கு நன்றி சொல்லும் உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றை போஸ்ட் செய்து இருந்தார். வானத்தை போல சீரியல் கிளைமாக்ஸ் காட்சி நெருங்கி விட்டது என்றும் அனைத்தையும் வழங்கிய கடவுளுக்கு நன்றி என்றும் போஸ்ட் செய்து இருந்தார். இதன் மூலம் சீரியல் முடிவுக்கு வருகிறது என்பது உறுதியானது. கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களின் பேராதரவை பெற்ற 'வானத்தை போல' சீரியல் முடிவுக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 


திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'வானத்தை போல' முடிவுக்கு வருவதால் அந்த ஸ்லாட்டில் 'மூன்று முடிச்சு' என்ற புதிய சீரியல் வரும் திங்கள் (ஆகஸ்ட் 19) முதல் ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே 2 ' சீரியலில் லீட் ரோலில் நடித்த ஸ்வாதி ஹீரோயினாக நடிக்க உள்ளார். கிராமத்து பின்னணியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த புதிய தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.