சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் மிகவும் பிரபலமான ஒரு தொடராக சன் டிவியின் டி.ஆர்.பி வரிசையில் முதலிடத்தையும் தக்க வைத்து வருகிறது என்பது சின்னத்திரை ரசிகர்கள் அறிந்த ஒரு தகவல். இருந்தாலும் அந்த தொடர் சமீப காலமாக டாக் ஆஃப் தி டவுனாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் அடுத்த குணசேகரன் யார் என்ற எதிர்பார்ப்பு.



ஈடு செய்ய முடியாத இழப்பு:



மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள எதிர்நீச்சல் தொடரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து கடந்த மாதம் டப்பிங் செய்து கொண்டு இருந்த போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அனைவரையும் புரட்டிப்போட்ட அவரின் இழப்பு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. இன்னும் அந்த துக்கத்தில் இருந்து எதிர்நீச்சல் சீரியல் குழுவினராலும், ரசிகர்களாலும் வெளியே வரமுடியவில்லை.

பலத்த யோசனை:

 

இருப்பினும் சீரியல் நகர்ந்தாக வேண்டும் என நிர்பந்தம் இருப்பதாலும் அந்த கதாபாத்திரத்தின் வெயிட்டேஜ் காரணத்தாலும் மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இடத்தில் வேறு ஒரு நடிகர் பொருத்தப்பட வேண்டும் என கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சீரியல் குழு தரப்பிலும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை நிரப்ப பலத்த யோசனைகளும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றது.

ரசிகர்களின் சாய்ஸ் : 

எதிர்நீச்சல் சீரியலின் வெறித்தனமான ரசிகர்கள் பலரும் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு சில நடிகர்களின் பெயர்களை யோசனையாக வழங்கி அவர்களின் யாரேனும் ஒருவரை தேர்ந்து எடுக்கலாம் என யோசனைகளை இணையத்தின் வாயிலாக தெரிவித்து வந்தனர். இளவரசு, பொன்வண்ணன், பசுபதி உள்ளிட்ட நடிகர்கள் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என பரிந்துரைத்தனர். இதன் மூலம் ரசிகர்களுக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பது தென்படுகிறது.

 



முதல் தேர்வு:

 

இருப்பினும் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் இருந்து அடிபட்ட ஒரு பெயர் எழுத்தாளர் மற்றும் நடிகருமான வேல ராமமூர்த்தி. ஆரம்பத்தில் இது குறித்து அவரிடம் கேட்டபோது அழைப்பு வந்ததாகவும் இன்னும் முடிவாகவில்லை என்றும் பதில் அளித்து இருந்தார். அதற்கு காரணமாக அவர் சினிமாவில் பிஸியாக இருக்கிறார் என கூறப்பட்டது.

விரைவில் புதிய குணசேகரன்:

 
சமீபத்தில் வெளியான எதிர்நீச்சல் ப்ரோமோ மூலம் விரைவில் குணசேகரன் என்ட்ரி இருக்கப்போகிறது என்பது தெளிவானது. இதுவரையில் அவர் காணாமல் போனதாகவும் அவரை தேடும் படலம் நடைபெற்று வருவதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. குணசேகரனின் கால்களை மட்டுமே காண்பித்து கதையின் திசையை மாற்றி அமைத்து ஒளிபரப்பி வந்தார்கள்.

அடுத்த வாரம் சர்ப்ரைஸ்:

 

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி குணசேகரனாக நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவரை வைத்து ஷூட்டில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வரும் வாரத்தில் புதிய ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தியை நான் பார்க்கலாம். ரசிகர்களே தயாராக இருங்கள்.