சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) இன்றைய (மே 30) எபிசோடில் மீனா விஜயா ரூமில் சென்று படுக்க போகிறாள். "கண்டதுங்களோட எல்லாம் தூங்க வேண்டி இருக்கு. எல்லாம் என் தலை எழுத்து" என விஜயா மீனாவை அவமானப்படுத்திப் பேச, மீனா தரையில் பாய் விரித்து படுத்து கொள்கிறாள். "எனக்கு கீழ பாய் விரித்து படுத்து கொண்டால் தான் தூக்கம் வரும்" என சொல்லி கீழே படுத்துக்கொள்கிறாள். 


ரோகிணி வந்ததும் விஜயா அவளை பாசமாக அழைத்து கட்டிலில் படுத்துக் கொள்ள சொல்கிறாள். விஜயா சத்தமாக குறட்டை விட்டுத் தூங்க, ரோகிணி தூங்க முடியாமல் அவஸ்தைபடுகிறாள். 



முத்துவும் அண்ணாமலையும் மனோஜ் ரூமில் சென்று படுத்துக் கொள்கிறார்கள். முத்து கதை சொல்கிறேன் என சொல்லி மனோஜை தூங்க விடாமல் படுத்துகிறான். அவன் பேசிக்கொண்டே இருப்பதால் மனோஜ் ஹாலுக்கு வந்து விடுகிறான். ரோகிணியும் விஜயாவின் தொல்லை தாங்க முடியாமல் வெளியில் வர இருவரும் “இந்த வாரம் முழுக்க நாம வெளிய தான் படுக்கணும் போல. இதற்கு ஏதாவது செய்தாகணும்” என பேசிக்கொள்கிறார்கள்.


அடுத்த நாள் காலை மீனா காய்ச்சல் அடிப்பதால் லேட்டாக எழுந்து வர விஜயா மீனாவை வாய்க்கு வந்தபடி திட்டுகிறாள். “உடம்புக்கு முடியாததால் தான் தூங்கிவிட்டேன். இன்னைக்கு ஒரு நாள் அவங்களுக்கு வேண்டியதை அவங்களே செய்துகொள்ள வேண்டியது தானே” என மீனா சொல்ல மேலும் பொங்கி எழுகிறாள் விஜயா. அண்ணாமலை விஜயாவை எவ்வளவு அடக்கியும் விஜயா வாயை மூடவே இல்லை. முத்து மீனாவுக்காக கஞ்சி செய்து கொடுக்கிறான். ரோகிணியும் மனோஜூம் ரெடியாகி வந்து இன்னும் டிபன் செய்யவில்லையா என அதிகாரம் செய்கிறார்கள். ஸ்ருதியும் ரவியும் மீனாவுக்கு இன்னும் உடம்பு சரியில்லை என்றதும் அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு நாங்கள் வெளியில் சாப்பிட்டு கொள்கிறோம் என கிளம்பிவிடுகிறார்கள். 


அண்ணாமலை ரோகிணியிடம் “ஸ்ருதிக்கு தான் சமைக்கத் தெரியாது, நீ சமைக்கலாம் இல்லையா?” எனக் கேட்க “எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கிறது, நாங்கள் வெளியில் சாப்பிட்டுக் கொள்கிறோம்” என ரோகிணியும் மனோஜூம் கிளம்பி விடுகிறார்கள்.


“உன்னால நாலு பேர் சாப்பிடாம பட்டினியா வேலைக்கு போயிட்டாங்க” என விஜயா மீண்டும் மீனாவைத் திட்ட மீனா சமையலறைக்குச் சென்று சமைக்க ஆரம்பிக்கிறாள். முத்து மீனாவைத் திட்டி “நீ எதுவும் செய்ய தேவையில்லை வா ஹாஸ்பிடலுக்கு போய் வரலாம்” என அழைத்து செல்கிறான். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை கதைக்களம்.