ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக் “தர்மலிங்கம் மாமா குடும்பத்தோட இந்த நிலைமைக்கு நாமளும் ஒரு காரணம் அதனால தான் இங்கே கூட்டி வந்தேன்” எனச் சொல்லி செல்கிறான்.


இதைத்தொடர்ந்து மறுபக்கம் அறியா ஆனந்திடம் “நாளைக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு. உங்களுக்கும் எனக்கும் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம்” என்று சொல்கிறாள். “ஏன் உங்களுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லையா?” என்று கேட்க, “இல்ல நாளைக்கு மீனாட்சிக்கும் எனக்கும் கல்யாண நாள், அதனால என்ன பாக்கணும்னு ஆசைப்பட்டா” என்று சொல்ல, ரியா ஆனந்தை மூளைச்சலவை செய்ய அவன் கல்யாணத்துக்கு ஒப்புக்கொள்கிறான். 


மறுபக்கம் மீனாட்சி மற்றும் தீபா என இருவரும் கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க அங்கு வரும் ராஜேஸ்வரி “திட்டம் போட்டு தான் உங்க அப்பா அம்மாவ இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க, ஒன்னும் இல்லாத குடும்பம் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தான் இங்கு வந்து இருக்கீங்க” என்று அவமானப்படுத்திப் பேச, தீபா தேவையில்லாம பேசாதீங்க என்று சொல்கிறாள். 


ஜானகி மற்றும் மைதிலி இதை கேட்டு வருத்தப்படுகின்றனர். மீனாட்சி “சாக்கடையில் கல் எறிஞ்சா அது நம்ம மேல தான் மீண்டும் வரும், நீ வா” என்று தீபாவை அழைத்துச் செல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.