சின்னத்திரையில் பல ஹிட் சீரியல்களை இயக்கிய இயக்குநர் தாய் செல்வம் உயிரிழந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த 2009 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா, ஷாயாலி பகத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘நியூட்டனின் 3-ம் விதி’. இந்த படத்தின் மூலம் இயக்குநராக தாய் செல்வம்  அறிமுகமானார். ஆனால் அப்படம் தோல்வியடைந்ததால் சீரியல் பக்கம் திரும்பிய அவர், விஜய் டிவியில் 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அமித் பார்கவ், பிரியா பவானி ஷங்கர் நடித்த ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலை இயக்கியிருந்தார்.






இந்த சீரியல் தாய் செல்வத்துக்கு மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. அவருக்கு ஏராளமானோர் ரசிகர்களாக மாறினர். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் தாயுமானவன், மௌன ராகம் சீசன் 1, நாம் இருவர் நமக்கு இருவர்,  பாவம் கணேசன் ஆகிய சீரியல்களை இயக்கியுள்ளார். இறுதியாக  ஈரமான ரோஜாவே 2  என்ற சீரியலை தாய் செல்வம் இயக்கி வந்தார். போட்டால் குமார் கான்வலா என்னும் வங்க மொழி சீரியலின் ரீமேக்காக உருவாகி வரும் இந்த சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 






இந்நிலையில் தான் இயக்குநர் தாய் செல்வம் மரணமடைந்துள்ளதாக விஜய் டிவி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில்  தெரிவித்துள்ளது. அந்த பதிவில் ‘உங்கள் படைப்புகள் எங்கள் மனதில்’ என தெரிவித்துள்ளது. தாய் செல்வம் மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.