பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு பாக்யா விவாகரத்து வழங்க அவரது குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகிறது. 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரம் முழுக்க வீட்டை விட்டு வெளியேறிய பாக்யாவை குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வந்து சமாதானப்படுத்துவது, குழந்தைகளுக்காக பாக்யா மீண்டும் வீட்டுக்கு வந்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.  


நேற்றைய எபிசோடில் கோபிக்கு விவாகரத்து வழங்க பாக்யா அவரை கோர்ட்டுக்கு அழைக்கும் காட்சிகள் ஒளிபரப்பானது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். பாக்யாவை தடுத்து நிறுத்தும் கோபியின் அம்மா ஈஸ்வரி, அவன் பண்ணதுக்கு நீயும் பதிலுக்கு இப்படி பண்ணா எல்லாம் சரியாகுமா என கேள்வியெழுப்புகிறார். மூத்த மகன் செழியனும் விமர்சிக்க எழில் பாக்யாவுக்கு சப்போர்ட் செய்கிறார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. 


அப்போது ஈஸ்வரி கோபி இனிமேல் அப்படி செய்ய மாட்டான். அதான் அவன் மன்னிப்பு கேட்டு விட்டானே.  அந்த ராதிகா ஊரை விட்டு போய் விட்டாளே..இனி பிரச்சனை இல்லாமல் இருக்கலாம் என கூறுகிறார். அதற்கு வேலைக்காரி செல்வி, அவங்க ஊரை விட்டு போகவில்லை. அக்கா அவங்களை பார்த்து பேசிவிட்டு தான் வந்தாங்க என தெரிவிக்கிறார். 


தொடர்ந்து மாமனார் மூர்த்தியிடம் பேசும் பாக்யா தான் ஏமாறக்கூடாத விஷயத்தில் ஏமாற்றப்பட்டதால் செத்து போகலாம் என தோன்றுவதாக கூறுகிறார். அப்படி செய்யக்கூடாது என்றால் விவாகரத்து வழங்குவது தான் ஒரே முடிவு என தெரிவிக்க மூர்த்தி பாக்யாவுக்கு ஆறுதல் கூறுகிறார். பின்னர் கோர்ட்டுக்கு நேரம் ஆகி விட்டதென கிளம்ப கோபி பாக்யாவை தடுத்து திமிரு காட்டுறீயா..நான் செஞ்சதுக்கு பழி வாங்குறியா என கேட்கிறார். அதற்கு பாக்யா நான் உங்களிடம் இருந்து விலகி இருக்கலாம் என முடிவு பண்ணிட்டேன் என சொல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.