பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களின் மகாசங்கமம் ஒரு மணி நேர எபிசோடை கலகலப்பாக மாற்றியுள்ளது.


ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றது. கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து, ராதிகாவுடனான திருமணம் என அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் இக்கதை சென்று கொண்டிருக்கிறது. 






பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகாசங்கமம் 


கொடைக்கானலுக்கு டூர் சென்றுள்ள பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், ஹனிமூனுக்காக அங்கு வந்துள்ள கோபி -ராதிகா 3 குடும்பமும் ஒரே ஹோட்டலில் தங்குகின்றனர். ஏற்கனவே எழில் கோபியை பார்த்து விட்ட நிலையில் அதுபற்றி இரு குடும்பத்தினரிடம் சொல்லாமல் இருக்கிறார். இன்றைய எபிசோடில் இரு குடும்பத்தினரும் வெளியே செல்லலாம் என முடிவெடுக்கின்றனர். அப்போது கண்ணன் தான் வரவில்லை. தலை வலிப்பதாக கூறி ரூமில் தூங்குகிறார். 


வெளியே சென்ற நிலையில் தனம், பாக்கியலட்சுமி குடும்பத்தினரிடம்  கதிர் வீட்டை போனது, மூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது என அனைத்தையும் சொல்கிறார். போன் பண்றப்ப இதெல்லாம் ஏன் சொல்லல என பாக்யா கேட்க சந்தோஷமான விஷயமா இது அதான் சொல்லல என தனம் கூறுகிறார். உடனே அவர் பாக்கியாவிடம் கோபி பற்றி கேட்க அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். பாக்யாவும் சிரித்துக் கொண்டே சமாளிக்கிறார். மறுபுறம் எழிலிடம் கோபியை பற்றி மூர்த்தி கேட்க அவரும் எதுக்கு இப்ப அதைப் பத்தி பேசுறீங்க விடுங்க என சொல்லி விடுகிறார். 


கண்ணனிடம் சிக்கிய கோபி 


தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் கண்ணன் ரூமின் பால்கனியில் நிற்கும் போது எதிர் ரூமின் வாசலில் கோபி நிற்பதை பார்த்து அவரை சந்திக்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் கோபியை பேச விடாமல் அவரது ரூமுக்கு அழைத்து சென்று கண்ணன், கோபி மாமா நீங்க சர்ப்பிரைஸ் கொடுக்கிறீங்களா என கேட்டுக்கொண்டிருக்கும் போது ராதிகா பாத்ரூமில் இருந்து வெளியே வருகிறார். அது ராதிகா என்பதை அடையாளம் கண்டுக்கொண்ட கண்ணன் பாக்யா அக்காவுக்கே துரோகம் பண்றீங்களா, இங்க இவங்களை கூப்பிட்டு வந்து கூத்தடிக்கிறீங்களா என கேள்வி மேல கேள்வி கேட்கிறார். இருங்க இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என சொல்லிவிட்டு மூர்த்தியை  கூப்பிட செல்கிறார். 


கோபியிடம் சண்டைக்கு செல்லும் மூர்த்தி


கார்டனில் இருந்த  இரு குடும்பத்தினரையும் சந்திக்கும் கண்ணன், கோபியை பார்த்ததாக கூறி மூர்த்தியையும் எழிலையும் அழைத்து செல்கிறார். எழில் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் கோபி-ராதிகா தங்கியிருந்த ரூமின் கதவை தட்டுகிறார். வெளியே வரும் கோபியை கண்டு அதிர்ச்சியடையும் மூர்த்தி மச்சான் நீங்க வரலைன்னு சொன்னாங்க என பேசிக்கொண்டு இருக்கும் போதே கண்ணன் உள்ளே யார் இருக்கான்னு பாருங்க என கூறி ராதிகாவை மூர்த்தியிடம் காட்டுகிறார். 


இரண்டு பேரையும் பார்த்து அதிரும் மூர்த்தி கோபியிடம் சண்டைக்கு செல்கிறார். கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு இன்னொருத்தி கூட லாட்ஜில்  ரூம் போட்டு தங்க அசிங்கமா இல்லையா என கேட்க, கோபி ஆவேசமடைகிறார். யார் இன்னொருத்தி ராதிகா நான் தொட்டு தாலி கட்டுன என் பொண்டாட்டி. உங்க அக்கா எல்லாம் இப்ப வேற யாரோ என கூறுவதைக் கேட்டு மூர்த்தி அதிர்ச்சியடைவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.