பிரபல இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இலங்கை மக்களுக்காக அவர் கடைசியாக பாடிய பாடல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 






இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், அரசியல் கட்சி தலைவர் என பன்முகம் கொண்டவரான டி. ராஜேந்தருக்கு அண்மையில் நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை போரூரில் உள்ள ராமசந்திர மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்ததை கண்டுபிடித்தனர். அதனை அடுத்து, மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சையில் அடைப்பு சீர் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


சிலம்பரசன் அறிக்கை


இந்தநிலையில், தனது தந்தையின் உடல்நலம் குறித்து சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். 


எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி. உங்கள் அன்புள்ள சிலம்பரசன்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


 




அமெரிக்கா செல்கிறாரா டி.ஆர்?


சிகிச்சை முடிந்திருக்கும் நிலையில், அவர் முழுமையாக குணமடையாததால் மேல் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா அல்லது சிங்கபூர் அழைத்துச் செல்லப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், அவரது மனைவி உஷா, மகன்கள் சிம்பு, குறலரசன், மகள் இலக்கியா ஆகியோர் டி. ராஜேந்தருடன் அமெரிக்கா செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் செய்து வருவதாக டி.ஆரின் நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவித்திருக்கிறது.


டி.ஆரின் உடல் நலம் அபாய கட்டத்தில் இல்லை என்றாலும், தொடர் சிகிச்சை தேவைப்படுவதால் அவர் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டி.ஆரின் உடல் நலம் குறித்து சிம்பு இன்று அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளார். 67 வயதான டி.ஆர் 1980-களில் இருந்து தமிழ் சினிமாவில் பணியாற்றி வருபவர், தனக்கென தனி முத்திரையை பதித்தவர். விரைவில் அவர் உடல் நலம் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என கோலிவுட்டில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.