சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மன்றத் தலைவர் வி.எம்.சுதாகர்  உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.


இவர் நீண்ட நாட்களாக சிறுநீரக புற்றுநோயினால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமாகியுள்ளார். 


இவரது மரணம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியாவது, என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 




மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி வி.எம். சுதாகர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தனக்கு சிறுநீரக் புற்று நோய் இருப்பதை தெரிவித்துள்ளார். அதேபோல், கடந்த ஒரு வருட காலமாக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தான் அவருடைய மருத்துவச் செலவினை கவனித்து வருகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அந்த டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருந்ததாவது, ”தலைவர் ரஜினிகாந்தின் அபரிமிதமான நன்மதிப்பைக் குலைப்பதற்காக இணையத்தில் ஒரு பொய்ப் பிரச்சாரம் உலா வருகிறது. இந்த இக்கட்டான காலங்களில் தலைவர் எனக்கு உதவவில்லை என்ற செய்தி முற்றிலும் போலியானது. உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர். இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார், அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.எனது சிகிச்சைக்கான நிதி சேகரிக்கும் பிரச்சாரத்தை எனது மகனின் நண்பர்கள் எனக்குத் தெரியாமல், அவர்களால் முடிந்த நிதியுதவியை வழங்குவதற்காக தொடங்கினார்கள். தலைவர் எங்களுக்கு உதவாததால் இது தொடங்கப்பட்டது என்ற செய்தி போலியானது. இது தலைவரின் நல்லெண்ணத்தையும் குணத்தையும் பாதித்துள்ளதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.” என குறிப்பிட்டு இருந்தார்.