வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மாநாடு. இந்தப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படம் முதலில் அண்ணாத்த திரைப்படத்திற்கு போட்டியாக தீபாவளிக்கு களமிறங்க தயாராக இருந்தது. ஆனால் திடிரென்று படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் அன்றைய தினமும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் படம் வெளியானது. படம் தற்போது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. 




குறிப்பாக டைம் லூப்பை வைத்து இவ்வளவு நேர்த்தியான திரைக்கதையை அமைத்ததற்காக வெங்கட் பிரபுவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. சிலம்பரசனுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு மாநாடு படம் ஒரு சிறப்பான வெற்றியை கொடுத்திருக்கிறது. படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் என்றால் அது எஸ்.ஜே.சூர்யா. ஆம் சிம்புவின் டைம் லூப்பால் பாதிக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா வெளிப்படுத்தும் மேனரிசங்கள் தியேட்டரில் அப்லாஸை அள்ளுகிறது. இன்னும் சொல்லப் போனால் தற்போது சமூகவலைதளங்கள் சிம்புவின் நடிப்பை விட, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பையே அதிகம் கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில் படத்தின் நடிகர் சிலம்பரசன் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் மூலம் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார். இதனை அவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவையும் ரஜினிகாந்த் போனில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.


இது குறித்து தனது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும் போது, “ இன்று என்னுடைய நடிப்புத் திறமைக்கு மிகப் பெரிய பரிசு கிடைத்திருப்பதாக உணர்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. நீங்கள் என் தசாப்தத்தை உருவாக்கினீர்கள். உங்களுடைய பாராட்டு இந்த பயணத்தை எதிர்கொள்வதற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்