மறைந்த நடிகரும் இயக்குனருமான மணிவண்ணனிடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் பிரபல இயக்குனர் சுந்தர்.சி. பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் குஷ்பூ நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான "முறை மாமன்" திரைப்படம் தான் இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம். அதன் பிறகு அருண் விஜயின் முறை மாப்பிளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி போன்ற பல ஜனரஞ்சகமான படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார். 


சூப்பர் ஸ்டாரின் அருணாச்சலம், உலக நாயகனின் அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் இவருடைய இயக்கத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப நிலையில் தனது ஓரிரு படங்களில் "கேமியோ ரோல்களில்" நடித்துவந்த சுந்தர். சி, சுராஜ் அவர்களின் "தலைநகரம்" படத்தின் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினர்.   


தலைநகரம் படத்தை தொடர்ந்து சுமார் 15 படங்களில் அவர் முழுமையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலால் தடைப்பட்டிருந்த சுந்தர். சி அவர்களின் அரண்மனை 3 படப்பிடிப்பு பணிகள் அண்மையில் முடிவடைந்தது. Post Production பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்நிலையில் சிபிராஜின் "கட்டப்பாவ காணோம்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மணி செய்யோன் இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க சுந்தர். சி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் படத்தில் நடிப்பவர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.


 இந்த படத்தில் பிரபல நடிகை சாந்தணி தமிழரசன் மற்றும் ஹெபாஹ் படேல் முன்னணி நாயகிகளாக நடிக்கவுள்ளனர். மேலும் பிக் பாஸ் புகழ் அபிராமி வெங்கடாச்சலம், கமல் காமராஜ் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். க்ரைம் ட்ராமாவாக உருவாக உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.