தெலுங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா திரைப்படம் இந்த வருடத்தின் இறுதியில் கிறிஸ்துமஸுக்கு ரிலீசாகும் என படக்குழு தெரிவித்துள்ளது


அனைத்திந்திய படமான புஷ்பாவின் முதல் பார்வையான 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து) தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர்,  இரண்டு பாகங்களாக புஷ்பா வெளிவரும் என்று அறிவித்தனர்.  இதனையடுத்து புஷ்பா மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.




மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் இரண்டாம் பாகம் 2022-ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா குறுக்கே வந்ததால் தாமதமாகலாம் எனத் தெரிகிறது.  இந்நிலையில் முதல் பாகத்திற்கான அப்டேட்டை அள்ளித்தூவி வருகிறது படக்குழு. அதன்படி வரும் டிசம்பரில் கிறிஸ்துமஸ் அன்று புஷ்பா முதல் பாகம் திரையரங்கில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடந்துவந்த நிலையில், இன்னும் சில காட்சிகளே மிச்சம் உள்ளன. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் ரூபாய் 250 கோடி முதல் 270 கோடி வரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கு படத்தின் கதையை சொல்ல வேண்டிய தேவை இருப்பதால் இந்த முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளனர். ஆந்திரப் பிரதேச காடுகளில் நடைபெறும் செம்மர திருட்டு குறித்து புஷ்பா விவரிக்கிறது. இது குறித்து பேசிய மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர், "நாங்களே எதிர்பார்க்காத வண்ணம் படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் உயிர் பெற்று, வளர்ந்து நின்றிருப்பதால், படத்தில் இரண்டு பாகங்களாக வெளியிட்டால் தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளோம்.


'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இரண்டு பாகங்களாக திரைப்படத்தை வெளியிட இருக்கிறோம். சிறந்த நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடன் இருப்பதால் இந்த கதையின் மூலம் திரையரங்குகளில் மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம்," என்று தெரிவித்தனர்.