தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான நடிகர் கவின் நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் ஹீரோவாக லிஃப்ட், டாடா உள்ளிட்ட படங்களில் நடித்ததைத் தொடர்ந்து தற்போது 'ஸ்டார்' படத்தில் நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடிப்பில் வெளியான 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் மூலம் பிரபலமான இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்டார்' திரைப்படம் மே 10ஆம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


 



சினிமாவில் ஸ்டார் நடிகராக வேண்டும் என்ற தன்னுடைய கனவை துரத்தி ஓடும் கதாபாத்திரத்தில் கவின் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை அதிகரித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும் இந்தச் சூழலில் இயக்குநர் இளன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் ரசிகர்களுக்கு அவசர அவசரமாக உருக்கமாக வேண்டுகோள் ஒன்றை திரை ரசிகர்களுக்கு வைத்துள்ளார். அவரின் இந்த போஸ்ட் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


ஸ்டார் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை நான் என்னுடைய தந்தை ஸ்டில்ஸ் பாண்டியனுக்கு அர்ப்பணிக்கிறேன். ஒரு தாழ்மையான வேண்டுகோள். நீங்கள் படம் பார்த்த பிறகு படத்தில் உள்ள மூன்று சர்ப்ரைஸ்களை யாருக்கும் சொல்லாமல் இருங்கள். நீங்கள் பெற்ற அனுபவத்தை மற்றவர்களும் பெற வேண்டும்  என்பதை தான் எனக்குள் இருக்கும் கலைஞன் விரும்புகிறான்" என போஸ்ட் பகிர்ந்துள்ளார். 


 






 


பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பரிச்சயமானவர் நடிகர் ஸ்டில்ஸ் பாண்டியன். குறிப்பாக ராஜா ராணி படத்தில் நடிகர் ஜெய் தந்தையாக நடித்திருப்பார். அவரின் மகன் தான் இயக்குநர் இளன். பெரிய நடிகனாகி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற தன்னுடைய கனவை மகன் நிறைவேற்றிவிட்டார் என்பதை பெருமிதத்துடன் பகிர்ந்து இருந்தார் நடிகர் ஸ்டில்ஸ் பாண்டியன். தன்னுடைய தந்தையின் வாழ்க்கையைப் பார்த்து ஊக்கம் பெற்று தான் இந்தத் திரைக்கதையை இயக்கியுள்ளார் என்பதை அவரே நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார். 


நடிகர் கவின் நடித்துள்ள இப்படத்தில் லால், ப்ரீத்தி முகுந்தன், அதிதி போஹங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாளை வெளியாகும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. நிச்சயம் இப்படம் வெற்றிப்படமாக அமைந்து வசூலிலும் வேட்டையாடும் எனக் கணிக்கப்படுகிறது.