95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் கைப்பற்றியுள்ளது. இந்தியாவுக்கான பெருமித தருணம் என்று நாடே இதைக் கொண்டாடிவர விழா பற்றிய அண்மைத் தகவல் ஒன்று அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.


ஆஸ்கர் வென்ற ஆர்.ஆர்.ஆர்.


அதாவது ஆஸ்கர் விருது விழாவை நேரில் கலந்துகொள்ள பாடலாசிரியர் சந்திரபோஸ், இசையமைப்பாளர் கீரவாணிக்கு மட்டுமே முறைப்படி அழைப்பும், டிக்கெட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களைத் தவிர ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் அனைவருமே டிக்கெட்டை காசு கொடுத்துதான் வாங்கியுள்ளனர் என்பதே அந்தத் தகவல். 


ஆஸ்கர் விழாவில் ராஜமெளலி அவரது மனைவி ரமா ராஜமெளலி, இவர்களது மகன், மருமகள். ராம் சரண் அவரது மனைவி, ஜூனியர் என்டிஆர் அவரது மனைவி என அனைவருமே தனித்தனியாக ஒவ்வொருவரும் சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.20.6 லட்சம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


பெருமை சேர்ந்த தருணம்:


உலக சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  அண்மையில் நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் நிலையில் இதில் இந்தியாவில் இருந்து 3 பிரிவுகளில் படங்கள் போட்டியிட்டது. அதன்படி சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற  நாட்டு நாட்டு பாடலும், ஆவணப்படம் பிரிவில்  The Elephant Whisperers படமும், Documentary Feature Film பிரிவில் All That Breathes படமும் போட்டியிட்டது.


இதில் All That Breathes படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதில் The Elephant Whisperers படம் ஆஸ்கர் விருதை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து சிறந்த பாடலுக்கான பிரிவில்  நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டனர். இப்படியாக இந்தியாவுக்கு நேரடியாக பெருமை சேர்ந்த தருணத்தில் அந்தப் படத்தின் இயக்குநருக்கே ஆஸ்கர் டிக்கெட் மறுக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கடைசி வரிசை இருக்கைகள்:


ஏற்கெனவே ராஜமவுலி மற்றும் குழுவினருக்கு கடைசி வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்ட தகவல் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் விவாதப் பொருளான நிலையில் தற்போது டிக்கெட் இலவசமாக வழங்கப்படாததும் கூட சேர்ந்துள்ளது.


சர்ச்சைகளுக்கு நடுவே ராஜவுமெளலி இந்தியா திரும்பியுள்ளார். அவருக்கும், இசையமைப்பாளர் கீரவாணிக்கும் மிகப்பெரிய வரவேற்பு நல்கப்பட்டது. விமானநிலைய்த்தில் ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஊடகங்கள் கேள்விகளைக் கொட்டித் தீர்க்க ராஜமெளலி கட்டைவிரலை உயர்த்தி தம்ப்ஸ் அப் மட்டுமே காட்டிவிட்டுச் சென்றார்.


ஆர்.ஆர்.ஆர். படம்:
கடந்தாண்டு இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கீரவாணி இசையமைத்த இப்படத்தில் “நாட்டு நாட்டு” பாடலின் காட்சியமைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் சமீபத்தில் கோல்டன் குளோப் விருதையும் நாட்டு நாட்டு பாடல் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது.