வருத்தப்படாத வாலிபர் சங்கம், வெள்ளக்காரத்துரை, காக்கிச்சட்டை, காஷ்மோரா, ஜீவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இந்த நிலையில் அவர் தற்போது தமிழில்  மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். 






விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்திற்கு  ‘டைகர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’,  ‘மருது’  ‘புலிக்குத்தி பாண்டி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா இந்தப்படத்திற்கு கதை மற்றும் வசனங்களை  எழுதியிருக்கிறார். 






 


 




இயக்குனர் கார்த்தி படம் குறித்து கூறுகையில்,  “டைகர் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும், பரபர த்ரில்லராக இருக்கும். ஒரு திரைக்கதை எழுத்தாளராக இந்த திரைப்படத்தில் இயக்குனர் முத்தையா பங்களிப்பது உண்மையில் உணர்வுப்பூர்வமாக எனக்கு  மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த திரைக்கதையை கூற வாய்ப்பளித்ததற்கும், இப்படத்தை ஒப்புக்கொண்டதற்கும்  விக்ரம் பிரபு சாருக்கு, மிகுந்த  நன்றி.” என்று கூறியுள்ளார்.


நடிகர் சக்தி வாசு வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் அனந்திகா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார்.  ‘விக்ரம் வேதா’ படத்திற்கு இசையமைத்து கவனம் ஈர்த்த சாம் CS இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். முன்னதாக 'வெள்ளக்கார துரை' படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவும், ஸ்ரீதிவ்யாவும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.