தமிழ் சினிமாவில் குடும்பக் கதாபாத்திரங்கள் முதல் வலுவான நடிப்புத் திறன் கொண்ட வேடங்கள் வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை சினேகா. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள அவர், சமீபத்தில் தனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத வலிமிகுந்த அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'புதுப்பேட்டை' திரைப்படத்தில் நடித்தபோது நடந்த ஒரு சம்பவம் குறித்தே சினேகா பேசியுள்ளார். அந்தப் படத்தில் நடிகர் பாலா சிங், அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு காட்சியில் பாலா சிங், சினேகாவின் வயிற்றில் எட்டி உதைக்க வேண்டியிருந்தது.

கட்டுப்பாட்டை இழந்த பாலா சிங்

அந்தக் காட்சியை நினைவுகூர்ந்த சினேகா, "அது வெறும் நடிப்பு இல்லை. உண்மையாகவே அவர் என் வயிற்றில் உதைத்துவிட்டார்," என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் காட்சி மிகவும் இயல்பாகவும், தீவிரமாகவும் இருக்க வேண்டும் என்று இயக்குநர் செல்வராகவன் மீண்டும் மீண்டும் கூறியதால், பாலா சிங் காட்சியில் முழுமையாக ஒன்றிப்போய் உதைக்கும் வலிமையை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டதாக அவர் விளக்கினார்.

Continues below advertisement

"காட்சி உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் உண்மையிலேயே என்னை மிதித்துவிட்டார். ஷாட் முடிந்தவுடன் நான் நேராக கேரவனுக்குச் சென்றேன். 'நான் கேரவனுக்குப் போகிறேன்' என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றதும், வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்," என்று சினேகா கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்ட செல்வராகவன்

பின்னர் நடந்த சம்பவம் குறித்து யாரோ ஒருவர் இயக்குநர் செல்வராகவனிடம் தெரிவித்ததாகவும், உடனடியாக அவர் வந்து தனது உடல்நிலையை விசாரித்ததாகவும் சினேகா தெரிவித்துள்ளார். "அவர் என்னிடம், 'உண்மையாகவே உதைத்துவிட்டாரா? ரொம்ப வலிக்கிறதா? மன்னித்துவிடுங்கள். கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள்' என்று கூறினார். அந்த அக்கறையை நான் மறக்க முடியாது," என்று அவர் நினைவுகூர்ந்தார்.

அந்த நேரத்தில் தாங்க முடியாத வலியை அனுபவித்திருந்தாலும், படம் வெளியான பிறகு திரையரங்கில் அந்தக் காட்சியைப் பார்த்தபோது வேறு மாதிரியான உணர்வு ஏற்பட்டதாகவும் சினேகா கூறினார்.

"அந்தக் காட்சி திரையில் மிகவும் சக்திவாய்ந்ததாக வந்திருந்தது. அப்போது நான் அனுபவித்த வலியும், சிந்திய கண்ணீரும் வீணாகவில்லை என்று தோன்றியது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை சினேகா பகிர்ந்தபின் இயக்குநர் செல்வராகவன் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. ஒருவேளை சினாகவிற்கு உள்காயம் ஏற்பட்டிருந்து அது அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கலாம் . நடிகர்களை இவ்வளவு கொடுமை செய்துதான் நடிப்பை வாங்கமுடியும் என்கிற எண்ணத்தை இயக்குநர்கள் எப்போது கைவிடப் போகிறார்கள் என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.