இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நெட்டிசன் ஒருவர் தன்னை பற்றி பகிர்ந்த மீம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 

  


கலாய்த்த நெட்டிசன்


ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன் ஒருவர் நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்த படங்கள் எல்லாம் ஹிட் ஆகிறதே என்பதை குறிக்கும் வகையில் மீம் ஒன்றை ரெடி செய்து வெளியிட்டு இருந்தார். இதனை சமூகவலைதளவாசி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து  ‘இது முற்றிலும் உண்மை’ என்று குறிப்பிட, அந்த ட்விட்டை நடிகர் எஸ்.ஜே. சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஸ்மைலிகளை தட்டிவிட்டு இருக்கிறார். அந்த ட்விட் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது 


 






யார் இந்த எஸ்.ஜே.சூர்யா


‘வாலி’ படத்தின் மூலம் திரையுலத்திற்கு இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து குஷி படத்தை இயக்கிய அவர், நியூ, அன்பே ஆருயிரே படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் அதில் நடிக்கவும் செய்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், அதன் பின்னர் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு  ‘இசை’ என்கிற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து, இசையும் அமைத்து இருந்தார்.


 






அதன் பின்னர் முழுக்க முழுக்க நடிப்பில் இறங்கிய எஸ்.ஜே.சூர்யா  ‘இறைவி’ படத்தில் பிரமாதமாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வந்த ஸ்பைடர் படத்தில் வில்லனாக மிரட்டிய அவர் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து அசத்தினார். இதனையடுத்து மீண்டும் கதாநாயகன் பாதைக்கு வந்த எஸ்.ஜே.சூர்யா மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.


மிரட்டிய எஸ்.ஜே.சூர்யா 


பின்னர் மீண்டும் மாநாடு படத்தில் வில்லனாக களமிறங்கினார். அதில் அவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப்படம் காரை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாகவும் இதற்காக ஜெர்மனியில் கார் ஒன்றை வாங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.