சிவகார்த்திகேயன் நடித்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ரெமோ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன.



ரெமோ


திரைப்படங்களைப் பார்த்து ஒரு ஆண் காதலிக்க கற்றுக் கொள்கிறார் என்றால் என்ன மாதிரியான செயல்களில் ஈடுபடுவார் என்று பார்க்கலாம்.

ஒரு பெண்ணின் பெயர் என்ன அவரது ஊர் என்ன. அவர் என்ன வேலை செய்கிறார், அவரது இயல்பு என்ன, தனது வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இப்போது அவர் இருக்கிறார். தன்னுடைய இயல்பிற்கு பொருந்துபவரா ஆகிய எல்லா கேள்விகளையும் புதைத்துவிட்டு அந்த பெண்ணை பார்த்த மாத்திரத்தில் காதலிப்பார். அதுவும் காமம் கலக்காத பரிசுத்தமான தெய்வீக காதல் செய்வார்..

இதற்கு அடுத்தக் கட்டமாக அந்த பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை ஃபாலோ செய்வது. நாம் சிரித்துக்கொண்டே அவரை நினைத்து மனதில் டூயட் பாடுவதை அந்த பெண்ணும் புரிந்துகொண்டு நம்மை பார்த்து பயப்படாமல் கேண்டிட் ஆக க்யூட் ரியாக்‌ஷன்ஸ் கொடுக்க வேண்டும்.

இப்பாடி ஒருவன் இந்த பூமியில் இருக்கிறான் என்பதை கூட தெரியமல் இருக்கும் அந்த பெண்ணிடம் திடீரென்று பயங்கர ரொமாண்டிக் ஆன முறையில் காதலை சொல்ல வேண்டும். அவரை பதில் பேச விடக்கூடாது அப்படி விட்டால்தான் உடனே ரிசல்ட்டு தெரிந்துவிடுமே. ஸ்டைலாக சொல்லிவிட்டு டேக் யுவர் டைம் என்று சொல்லிவிட்டு வரவேண்டும்.

கடைசியாக அந்த பெண் நம்மை காதலிக்கவில்லை என்று சொன்ன பின்பு சிவனேன்னு இருந்த அதே பெண்ணை திட்டி ஒரு பாட்டும் பாடலாம்.

பிறகு குடித்து நன்றாக தாடி வளர்த்து சோகத்தில் கிடக்கும் கதாநாயகனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை வரும். அதுவாக எல்லாம் வராது. எல்லாம் நம்ம இயக்குநர் கைவண்ணம்தான். எவ்வளவு விலகிப் போனாலும் விதி இருவரையும் நெருங்கி வரவழைக்கும். பின் நம் ஹீரோவை பார்த்து இம்பிரஸ் ஆவார் ஹீரோயீன். பிறகென்ன திட்டமிட்ட குடும்பம் திகட்டாத இன்பம்தான். முக்கியமான ஒன்றை மறந்துவிட்டோம். நர்ஸ் வேஷம் போட மறந்துவிடாதீர்கள். அனிருத்தை இசையமைக்க கூட்டிக்கொண்டு பி.சி ஸ்ரீராமை கேமரா பிடிக்கச் சொல்லி அழைத்து போங்கள்


என்னதான் விமர்சனங்கள் வந்தாலும், சிவா - கீர்த்தி கெமிஸ்ட்ரிக்காக இந்த படம் கொண்டாடப்பட்டது வேறு கதை. விமர்சனங்கள் குவிந்ததால், இனி இப்படி ஸ்டாக்கிங் கதைகள் ஊக்குவிக்கமாட்டேன் என சிவகார்த்திகேயன் ஒரு தனியார் பத்திரிக்கை பிரஸ்மீட்டில் உறுதி கொடுத்தார். அது வரலாறு