சிவாஜி குடும்பத்தில் சொத்துப் பிரச்னை: பிரபு மற்றும் அண்ணன் ராம்குமார் மீது சகோதரிகள் வழக்கு!

பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டதாக மனுதாக்கல் அவர்களது சகோதரிகள் செய்துள்ளனர்.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இன்றும் தொடர்பவர் செவலியே சிவாஜி கணேசன். மறைந்தாலும், அவரது நடிப்பு இன்றும் பலரால் கொண்டாடப்படுகிறது. திரை உலகில் மட்டுமல்லாது, நிஜ வாழ்க்கையிலும் சிவாஜி, குடும்ப வாழ்க்கையில் கண்ணியமானவர். அதனால் தான், பல நடிகர்கள் அவரது குடும்பத்தை கண்டு பொறாமைப்படுவர். 

Continues below advertisement

சிவாஜி தயாரிப்பில் வெளியாகும் படங்களில் பணியாற்றுவோர், சிவாஜி வீட்டில் இருந்து வரும் உணவுக்காக தவம் இருப்பர். அந்த அளவிற்கு ருசியான உணவை வழங்குவதில் சிவாஜியின் மனைவி கை தேர்ந்தவர். சிவாஜிக்கு ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி என நான்கு குழந்தைகள் உண்டு. அதில் நடிகர் பிரபுவை அனைவருக்கும் தெரியும். சிவாஜி காலத்திலிருந்தே அவர் நடித்து வருகிறார். இன்று பல முக்கிய குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். 


தயாரிப்பு பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், சமீபத்தில் சில சினிமாக்களில் நடித்தார். அவரது மகனும் சில படங்களில் நடித்தாலும், பெரிய அளவில் அவரால் சொபிக்க முடியவில்லை. சிவாஜியை தொடர்ந்து மூன்று தலைமுறையாக தமிழ் சினிமாவில் அவரது குடும்பம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. சிவாஜி மறைவுக்குப் பின் அவரது குடும்பத்தை தங்கள் குடும்பமாக பாவிக்கும் எத்தனையோ முன்னணி நட்சத்திரங்கள், இன்றும் அந்த மதிப்பை அவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தான், மறைந்த நடிகர் திலகம் சிவாஜியின் குடும்பத்தில் தற்போது சொத்து பிரச்சனையால் மோதல் வெடித்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சம்பாதித்த சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 



தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை நடிகர் பிரபு மற்றும் அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும் , சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாகவும் சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி குற்றம் சாட்டியுள்ளனர். பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டதாக மனுதாக்கல் செய்துள்ள அவர்கள், நீதிமன்றம் தலையிட்டு தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், போலி ஆவணங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சகோதரிகள் முன்வைத்திருப்பதால், எது மாதிரி உத்தரவு வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வழக்கமாக சிவில் வழக்குகள் சில ஆண்டுகளை கடக்கும். இது பிரபலங்களின் வழக்காக இருப்பதால், இது தொடர்பான விசாரணை எந்த நிலையில் செல்லும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம். 

Continues below advertisement
Sponsored Links by Taboola