இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் சைந்தவி தம்பதியினர் இன்று தனது பத்தாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார்கள். தனது வாழ்க்கைத் துணைக்கு பாடகர் சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ள வாழ்த்துப்பதிவு அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.


தனது கணவருக்கு எழுதிய வாழ்த்து


தனது பதிவில் பாடகர் சைந்தவி இப்படி கூறியுள்ளார் “ நமக்கு திருமணமாகி  10 ஆண்டுகள் கழிந்துவிட்டன ஆனால் திரும்பிப் பார்க்கையில் நேற்று போல் இருக்கிறது. என் வாழ்க்கைத் துணைக்கு 10-வது ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள். ஒரு நல்ல நண்பனாக , ஒரு பாசத்துக்குரிய கணவனாக, நமது மகளுக்கு ஒரு சிறந்த தந்தையாக இருப்பதற்காக நன்றி. ஒரு சிறந்த நபராக இருப்பதற்கு நன்றி. 10 ஆண்டுகளை  நாம் சேர்ந்து கடந்ததைப்போல் காலமெல்லாம் பயணிக்க வேண்டும்.” என்று தனது கணவருக்கு மிக அழகான வரிகளை எழுதியுள்ளார்.






 


ஸ்கூல் லவ்


ஜிவி மற்றும் சைந்தவி இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளிக் காலத்திலேயே இருவரும் காதலித்து வந்தார்கள். கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 2020-ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது மகளுக்கு அன்வி என்று பெயர் வைத்தனர். தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமில்லாமல் திரை வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். ஜிவி இசையமைத்த பல அழகான பாடல்களை தனது குரலின் மூலமாக மேலும் அழகாக்கியவர் சைந்தவி.


இணைந்து பாடிய பாடல்கள்


உதயம் என்.ஹெச் 4 படத்தில்  யாரோ இவன், மயக்கம் என்ன படத்தில்  பிறை தேடும், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் என்னாச்சு ஏதாச்சு, தலைவா படத்தில் யார் இந்த சாலையோரம் ஆகியவை இருவரும் சேர்ந்து தங்களது குரலில் ரொமான்ஸ் செய்த பாடல்களாக அமைந்தன.


ஜிவி பிரகாஷ்


தற்போது ஜிவி பிரகாஷ் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கி தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் ஜிவி. மேலும் வாடிவாசல், மார்க் ஆண்டனி , ஜப்பான் ஆகிய முக்கியத் திரைப்படங்களிலும் இசையமைத்திருக்கிறார்.