மலேசியாவில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன் இருவரும் இசை நிகழ்ச்சி நடத்த உள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இவர் பல நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக மக்கள் அனைவரையும் இசையால் கவர்ந்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார் என்றால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். இந்த ரசிகர்களை உற்சாகம் படுத்தும் விதமாக இவருடன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசனும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன்  இருவரும் ஹை ஆன் யுவன் (High on U1) என்ற இசை நிகழ்ச்சிக்காக ஒன்று சேர்கிறார்கள். இந்நிகழ்ச்சி மலேசியாவில் ஜூலை 15 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.


இதில் நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு சிலம்பரசன் மலேசியாவில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதால் ரசிகர்களிடையே ஹை ஆன் யுவன் நிகழ்ச்சி அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஹை ஆன் யுவன் இசை நிகழ்ச்சியை தொழிலதிபர் கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் பெரும் பொருட்செலவில் நடத்துகிறார்கள். ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கவே யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன் இருவரையும் ஒன்று சேர்த்து இருக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜாவை வைத்து அமெரிக்காவில் உள்ள 6 மாநகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தவும் முடிவு செய்து இருப்பதாக கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் கூறியிருக்கிறார்கள்.


சினிமாவைப் பொறுத்தவரை சிம்புவின்  மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம், வானம், அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மாநாடு ஆகிய படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த இசை நிகழ்ச்சியும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.