தன் திருமணம் காரணமாக ஹீராமண்டி சீரிஸ் விழாவில் அதிதி கலந்துகொள்ளாததாக நேற்று அக்குழு உறுதி செய்துள்ளது.


தெலங்கானாவில் திருமணம்


காதல் பறவைகளாக கடந்த சில ஆண்டுகளாக வலம் வந்த பிரபல நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவ் ஹைதாரிக்கும் நேற்று தெலங்கானா மாநிலத்தில் நெருங்கிய நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்று முடிந்ததாகத் தகவல் வெளியானது.


‘மகா சமுத்திரம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தது முதல் சித்தார்த்தும் அதிதியும் டேட்டிங் செய்து வந்த நிலையில், இருவரும் தங்கள் காதல் பற்றி ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தொடர்ந்து தங்கள் சோஷியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்ந்து “இருக்கா, இல்லையா” என தங்கள் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வந்தனர்.


வாழ்த்திய சீரிஸ் குழு


இந்நிலையில், தெலங்கானா மாநிலம், வனபர்தி மாவட்டம், ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் இருவருக்கும் ரகசியமாக திருமணம் நேற்று நடைபெற்று முடிந்ததாக டோலிவுட் சினிமா வட்டாரம் தொடங்கி இணையம் முழுவதும் தகவல் தீயாய் பரவத் தொடங்கியது.


நேற்று மாலை இருவரும் திருமணப் புகைப்படங்களுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில், அப்படியான அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் நேற்று நடைபெற்ற, அதிதி நடிப்பில் வெளியாக இருக்கும் ஹீராமண்டி சீரிஸின் விழாவில் அதிதிக்கு திருமணம் நடைபெற்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், அதிதி நடித்துள்ள ‘ஹீராமண்டி’ நெட்ஃப்ளிக்ஸ் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விரைவில் வெளியாக உள்ளது. பிரபல நடிகைகள் மனிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்டோருடன் அதிதியும் முக்கியக் கதாபாத்திரத்தில் இத்தொடரில் நடித்துள்ளார்.


இந்நிலையில் இத்தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு விழா நேற்று நடைபெற்றது. மே 1ஆம் தேதி இத்தொடர் வெளியாக உள்ள நிலையில், அதிதி தவிர அனைத்து நட்சத்திரங்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்நிலையில் “அதிதிக்கு இன்று திருமணம் என்பதால் அவர் இந்த விழாவில் இன்று கலந்துகொள்ளவில்லை, நாம் அனைவரும் அவரை வாழ்த்துவோம்” என விழா நெறியாளர் மேடையில் அறிவிக்க, படக்குழுவினர் கைதட்டி அவரை வாழ்த்தினர்.


 






முன்னதாக அதிதி - சித்தார்த்துக்கு திருமணம் உண்மையில் நடைபெற்றதா என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், இந்த வீடியோவால் தற்போது இவர்களது திருமணத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இருவரையும் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.