நடிகர் ஷாரூக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக அவரது படம் ஒன்று  மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 


பாலிவுட் பாட்ஷா என்றழைக்கப்படும் நடிகர் ஷாரூக்கான் நாளை தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக பதான், ஜவான், டன்கி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனிடையே நாளை இந்த படங்களின் அப்டேட்டுகள் ஷாரூக் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பாக்கப்படும் அதேவேளையில் அவரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படம் மீண்டும் தியேட்டரில் வெளியாகவுள்ளது. 






1995 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி வெளியான இப்படத்தில் ஷாரூக்கான் - கஜோல் இருவரும் ஜோடி சேர்ந்தனர். யாஷ் சோப்ரா தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே தயாரித்திருந்த நிலையில், ஆதித்யா சோப்ரா இயக்குநராக அறிமுகமானார். வெறும் 4 கோடியில் தயாரான இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. ஷாரூக்கான் - கஜோல் ஜோடி பாலிவுட் ரசிகர்களின் பேவரைட்டாகவும் அமைந்தது. மேலும் இப்படத்தில் அம்ரிஷ் பூரி, ஃபரிதா ஜலால், அனுபம் கெர், சதீஷ் ஷா மற்றும் ஹிமானி ஷிவ்புரி மற்றும் பலர் நடித்த நிலையில் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே  படம் 10 பிலிம்பேர் விருதுகளை வென்றது. 






இந்த படம் மும்பையில் ஒரு திரையரங்கில் 1200 வாரங்களைக் கடந்து ஓடியது. இப்படம் தான்  இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம்  என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்நிலையில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் இன்ஸ்டாகிராமில்  ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிவிஆர், ஐநாக்ஸ் மற்றும் சினிபோலிஸ் திரையரங்குகளில் ஷாரூக்கான் பிறந்தநாளை முன்னிட்டு ராஜ் மற்றும் சிம்ரனின் புகழ்பெற்ற பயணத்தை அனுபவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தின் ரி- ரிலீஸ் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.