Actress Santhoshi: இலங்கையில் மேக்கப் செமினாருக்கு சென்ற நடிகை சந்தோஷி சாப்பாட்டால் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து பேசியது வைரலானது.

 

சீரியல், திரைப்படங்களில் நடித்த சந்தோஷி, சில ஆண்டுகளாக நடிப்பதில் இருந்து ஒதுங்கி பேஷன், மேக்கப், பொட்டிக் ஷாப் வைத்திருப்பது என ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். பிரபலங்களுக்கு மேக்கப் செய்வதுடன், அது தொடர்பாக பல்வேறு பயிற்சி வகுப்புகளையும் எடுத்து வருகிறார் சந்தோஷி.

 

நடிப்பை காட்டிலும் மேக்கப் மற்றும் ஃபேஷன் டிசைனால்  பிரபலமான சந்தோஷி, தென் மாநிலங்கள் மட்டுமில்லாமல் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பயிற்சி வகுப்புகள் எடுத்து வந்துள்ளார். அந்த வகையில் இலங்கை தலைநகர் கொழும்பில் சந்தோஷி பங்கேற்ற மேக்-அப் செமினார் நடைபெற்றது. ஆனால், அந்த நிகழ்ச்சியால் தான் சிரமத்திற்கு ஆளானதாக, அதுவும் சாப்பாட்டு விஷயத்தில் கஷ்டப்பட்டதாகவும் சந்தோஷி அதிருப்தி தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக நிகழ்ச்சி மேடையில் பேசிய சந்தோஷியின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது. நிகழ்ச்சியில் நடந்தது தொடர்பான தகவல்களும் இணையத்தில் பகிரப்பட்டன. அதாவது. கொழும்பில், சந்தோஷி பங்கேற்ற மேக்-அப் செமினார் நிகழ்ச்சிக்கு எதிர்பார்க்காத அளவுக்கு அதிகமான கூட்டம் வந்துள்ளது. இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திணறியுள்ளனர். பிரச்சனை முதலில் சாப்பாட்டில் ஆரம்பித்துள்ளது. சந்தோஷி அசைவ உணவு சாப்பிடாதவர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சந்தோஷி உட்பட அனைவரையும் அசைவ உணவகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சாப்பிடாத சந்தோஷி ஜூஸ் மட்டும் குடித்ததாக கூறப்படுகிறது.

 

இது மட்டுமில்லாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சாப்பாடு பொட்டலம் கொடுக்கப்பட்டதுடன், சரியான நேரத்திற்கு தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் டென்ஷனான சந்தோஷி, இதற்கு முன்பு தன்னுடைய வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு இதுபோன்ற கஷ்டங்கள் ஏற்பட்டது இல்லை என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் தான் அசிங்கப்பட்டதாக சந்தோஷி கூறியுள்ளார். இதுமட்டுமில்லாமல், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியான விளம்பரம் செய்யாமல் சந்தோஷிக்கு ஏமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது.