மக்கள் இசைக்கலைஞர்களான செந்தில்கணேஷ் – ராஜலெட்சுமி தம்பதியினர் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட்டில் எடுத்த அசத்தலானப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவரும் நிலையில் நெட்டிசன்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.


இன்றைய சூழலில் என்னதான் பாப் பாடல்கள், கிளாசிக் பாடல்கள் மக்களிடம் பிரபலமடைந்துவந்தாலும் நாட்டுப்புறக்கலைக்கென்று தனி மவுசு உள்ளது. அப்படி தன்னுடைய நாட்டுப்புறக்கலைகள் மூலம் தமிழகம் முழுவதும் அறிமுகமானவர்கள் தான் செந்தில் கணேஷ்- ராஜலெட்சுமி தம்பதியினர். பல மேடை நிகழ்ச்சிகளில் பாடி மக்களிடம் பிரபலமான இவர்களுக்கு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதில் தங்களின் அனைத்துத் திறமைகளையும் செம்மையாக வெளிப்படுத்தியதன் பலன்தான் இவர்களின் குரல் தற்போது உலகெங்கிலும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.



குறிப்பாக ராஜலெட்சுமி பாடும் பாடல்கள் அனைத்தும், அவருடைய கணவர் செந்தில் கணேஷை மனதில் வைத்துப் பாடியதாக அடிக்கடி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூறியிருப்பார். அப்படி சின்ன மச்சான் பாடலில் தொடங்கி தற்போது புஷ்பா படத்தில் வெளியான வாயா சாமி பாடல் வரை கணவரை மனதில் வைத்து பாடியதோடு அவை சூப்பர் ஹிட்டும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இப்படி தன்னுடைய திறமையின் மூலம் மட்டுமே முன்னேறினர் இத்தம்பதியினர்.  இதனையடுத்து  அவர்கள் செய்யும் சின்ன சின்ன நடவடிக்கைகளையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக ராஜலெட்சுமி தனது மாமியார், நாத்தனார், மகன் மற்றும் மகள்களுடன் பேஸ்புக்கில் அடிக்கடி லைவில் வருகிறார். இதோடு கணவருடன் எடுக்கும் புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிடுகிறார். இப்படி சின்ன சின்ன விஷயங்களை இணையத்தில் பார்க்கும் ரசிகர்கள் பல கருத்துக்களைப் பதிவிட்டுவருவது வழக்கம்.


இந்நிலையில் தற்போது சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் விதவிதமாக ஆடை அணிந்து போட்டோஷூட் நடத்தி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது ராஜலெட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் இணைந்துள்ளனர். சமீபத்தில் இவர்கள் மணக்கோலத்தில் இருக்கும்படியாக போட்டோஷூட்டுகளை நடத்தியுள்ளனர். இதனையடுத்து  ராஜலெட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கண்களுக்குள் என்னவர், கனவே கலையாதே, உன்னுலகம் பெரிதாக இருக்கலாம் ஆனால் எனக்கான உலகம் நீ மட்டுமே“ என்ற கேப்ஷன்களோடு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.










இதனைப் பார்த்த செந்தில் கணேஷ் – ராஜலெட்சுமி தம்பதியினரின் ரசிகர்கள், ”அக்கா உங்களுக்கு அழகான சிரிப்பு, உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசு, வாழ்த்துக்கள், திருமணக்கோலம் மிகவும் அருமை” என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.