Continues below advertisement

மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள'செய்! செய்யாதே!'திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலகினர், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசுகையில், தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் எப்போதும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்று குறிப்பிட்டார். மருத்துவராக அமெரிக்காவில் பணியாற்றிய டாக்டர் எஸ். ராஜா, சினிமா மீதான ஆர்வத்தால் இந்தியா திரும்பி இப்படத்தை இயக்கியிருப்பது பாராட்டத்தக்கது என்றும், சமூகப் பொறுப்புள்ள இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

Continues below advertisement

முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், அரசியலில் இருந்த ஒருவர் சமூகச் செய்தியுடன் கூடிய திரைப்படத்தை உருவாக்கியிருப்பது வரவேற்கத்தக்க முயற்சி என்று பாராட்டினார். மருத்துவ விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் இப்படம் இளைஞர்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா பேசுகையில், இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல், தவறான மருத்துவ தகவல்கள் போன்ற பிரச்சினைகளையும், பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்களின் பொறுப்பையும் இப்படம் பேசுகிறது என்றார். அமெரிக்காவில் இருந்து பலமுறை வந்து சிரமங்களை கடந்து இப்படத்தை உருவாக்கியதாகவும், ஹெச். ராஜா எந்தவித சம்பளமும் பெறாமல் நடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஹெச். ராஜா பேசுகையில், உடல்நலக் குறைவிலிருந்து மீண்டு மீண்டும் பொதுமக்கள் முன் நிற்பதில் மகிழ்ச்சி தெரிவித்தார். படத்தில் எந்த நடிகருக்கும் மேக்கப் பயன்படுத்தாமல் இயல்பான தோற்றத்தில் நடித்திருப்பதாகவும், செவிலியர்கள் மற்றும் முன்கள மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பை படம் வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.

ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை டாக்டர் எஸ். ராஜா இயக்கியுள்ளார். ஹெச். ராஜா தமிழ்நாடு முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், குரு விஜய், தர்ஷினி ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின் சான்றிதழைப் பெற்றுள்ள'செய்! செய்யாதே!'திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.