இயக்குனர் சீனு ராமசாமியின் சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை நூலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து மடல் எழுதியிருந்த நிலையில், அவருக்கு நன்றி தெரிவித்து சீனு ராமசாமி நெகிழ்ந்துள்ளார்.


சீனு ராமசாமி நேற்று தனது 50ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய நிலையில், அவரது மனைவி மற்றும் மகள்கள் இணைந்து அவரது எழுத்துகளை தொகுத்து சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை எனும் புத்தகத்தை பரிசாகக் கொடுத்து அசத்தினர். இந்த நூலுக்கு அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து மடல் எழுதியிருந்தார்.




முதலமைச்சர் வாழ்த்து மடல்


அதில், “சமூகப் பொறுப்புணர்வுமிக்க, கவித்துவமான திரைப்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருக்கும் இயக்குநர் சீனுராமசாமி அவர்கள் இப்புத்தகம் வெளியிடப்பட்டிருக்கும் வேளையில் தனது ஐம்பதாவது வயதில் அடியெடுத்து வைத்திருப்பார்.


அவரது பொன்விழாவையொட்டி, ஏற்கனவே அவர் எழுதி வெளிவந்த கவிதைத் தொகுப்புகளோடு புதிதாக எழுதிய கவிதைகளையும் இணைத்து 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை" என்ற இந்தக் கவிதைத் தொகுப்பு ஆலிவ் பதிப்பகத்தின் முதல் நூலாக வெளிவருவதை அறிந்து மகிழ்கிறேன்.


’தென்மேற்குப் பருவக்காற்று; என்ற தனது இரண்டாம் படைப்பிலேயே தேசிய விருதை எட்டிப்பிடித்த இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் அத்தலைப்பிலேயே தனது கவித்துவத்தைக் காட்டியிருப்பார். திரைமொழியில் மட்டுமல்லாமல், தமிழ்மொழியிலும் அவருக்கிருக்கும் ஆளுமையை வெளிப்படுத்துவதாக அவரது கவிதைகள் அமைந்திருக்கின்றன.


கிராம வாழ்விலும் நகர வாழ்விலும் நாள்தோறும் நாம் காணும் மிகச் சாதாரணக் காட்சிகளையும் நிகழ்வுகளையும் ஒரு தேர்ந்த இலக்கியவாதிக்கே உரிய தனது அவதானிப்புகளால் கவிதைகளாக்கி கையளித்திருக்கிறார் சீனுராமசாமி. பொன்விழா காணும் அவர் மென்மேலும் பல அழகிய, மென்மையான படைப்புகளை வழங்குவதோடு, பல கவிதைத் தொகுப்புகளையும் வழங்கிட வாழ்த்தி மகிழ்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.


நெகிழ்ந்த இயக்குனர் சீனு ராமசாமி!


தன் மனைவி மற்றும் மகள்கள் அளித்த இந்த ஆச்சரியப் பரிசால் திக்குமுக்காடிப்போன இயக்குனர் சீனு ராமசாமி முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், “அனைவருக்கும் அன்பான வணக்கம், எழுதுவது சீனு ராமசாமி. எனக்கு ஆச்சரியப் பரிசு தர இது நாள்வரை நான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து, எனக்குத் தெரியாமல் நூலாக்கி 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை' என அந்நூலுக்கு என் கவிதையையே தலைப்பிட்டு பிறந்தநாள் பரிசாக என் மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர். இந்நூலுக்கு வாழ்த்துமடல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


 ஒரு கணவனுக்கு ஆச்சரியமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை தொகுப்புக்கு ஊக்கமளித்து, பாராட்டி, ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா அல்லது என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயப்பூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை.


வைரமுத்து அணிந்துரை


என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதலமைச்சரின் கனிந்த இதயத்திற்கு முன் வணங்கி நிற்கிறேன். மேலும் அணிந்துரை தந்தவர் வைரமுத்து அவர்கள்...


கவிஞரும் தன் பங்களிப்பாக ஆயிரம் மலர்களை சொற்களாக்கி சூடிவிட்டார். உங்கள் கருத்த கைகளை முத்தமிடுகிறேன் கவிஞரே..




கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய சீனாஜான்சன், என் வாழ்நாளில் சிறப்பானநினைவுப் பரிசினை தந்த உங்களுக்கு இதய நன்றிகள்.


நூலினை வீட்டுக்கே வந்து வெளியிட்டவர் நடிகர் மோகன்...அதுவும் தீடீரென்று. என் காதலுக்குரியவர் அவர். மோகன் சாருக்கு இதய நன்றிகள். ஆச்சர்யம் அதிர்ச்சியாயிற்று. திக்குமுக்காடிப்போனேன்.


வாழ்த்திய அனைவருக்கும் அன்பு நன்றி. வணக்கம்” எனப் பகிர்ந்துள்ளார்.