கமல்ஹாசன் நடித்த 'சட்டம் என் கையில்' படம் திரைக்கு வந்து இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதில் சத்யராஜ் நடிகராக அறிமுகமானார்.  சினிமாவில் நடிகராகி இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவு செய்கிறார் சத்யராஜ்.


45 ஆண்டு கால சினிமாப் பயணம்


இந்த நாற்பதைந்து ஆண்டுகளில் தெலுங்கு, மலையாளம் , தமிழ்  என அனைத்து மொழிகளிலும் மொத்தம் 240 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சத்யராஜ்.  வில்லன் , ஹீரோ, காமெடி, தயாரிப்பாளர்  என பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.


வில்லாதி வில்லன்


தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்கள் என்றால் நம்பியார் தான் நமக்கு நினைவுக்கு வருவார், அவருக்கு அடுத்ததாக ரகுவரன் இந்த வரிசையில் குறிப்பிடத்தகுந்த அடையாளத்தைப் பெற்றவர் சத்யராஜ். அவர் நினைத்திருந்தால் தமிழ் சினிமாவின் ஆல் டைம் வில்லன்களில் எளிதாக முன்னுக்கு வந்திருக்கலாம்.  நடிப்பதில் தீவீர ஆர்வம் கொண்ட சத்யராஜ் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறது கமல்ஹாசன் நடித்த சட்டம் என் கையில் படத்தில் முக்கிய வில்லனாக நடித்த தேங்காய் சீனிவாசனுக்கு அடியாளாக நடித்தார்.


மணிவண்ணன் கொடுத்த வாய்ப்பு


இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் சத்யராஜ். சிவாஜி கணேசன், பிரபு, மோகன் , விஜய்காந்த் முதலிய நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்து வந்த சத்யராஜின் திறமையை அடையாளம் காட்ட வாய்ப்பளித்தார் அவரது கல்லூரி நண்பரான இயக்குநர் மனிவண்ணன். தான் இயக்கிய  ஜனவரி 1 படத்தின் சத்யராஜுக்கு துணை நடிகராக வாய்ப்பளித்தார். 24 மணி நேரம், நூறாவது நாள் ஆகியப் படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ் கதாநாயகர்களை விட அதிகம் கவனிக்கப்பட்டார். சத்யராஜை வைத்து மொத்தம் 25 படங்களை இயக்கினார் மணிவண்ணன். அதில் 17 படங்களில் வில்லனாக நடித்தார்.


வில்லன் டூ ஹீரோ


வில்லனாக வெற்றிபெற்ற சத்யராஜ்  ஹீரோவாக மாறுவதில் அவருக்கு  நிறைய சவால்கள் இருந்தன. மக்கள் அவரை மிக பயங்கரமான வில்லனாக  நம்பத்தொடங்கிவிட்டார்கள். இயக்குநர்கள் அவரை கதாநாயகனாக  நடிக்க வைத்த தயங்கினார்கள். இந்த சமயத்தில் வெளியான ரசிகன் ஒரு ரசிகை, கடலோர கவிதைகள் படத்தில் கதாநாயகாக நடித்தார். இந்தப் படங்கள் அவரது வில்லன் இமேஜை மாற்ற உதவின. இதனைத் தொடர்ந்து  மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்தார் சத்யராஜ். ரஜினியை விட அவர் நான்கு வயதே மூத்தவராக இருந்த போதிலும். தொடர்ந்து கடமை கண்ணியம் காட்டுபாடு, பூவிழி வாசலிலே, மக்கள் என் பக்கம் என வெற்றிப்படங்களைக் கொடுத்தார் .  


காமெடி கதாபாத்திரங்கள் 


 200 காலகட்டம் சத்யராஜுக்கு தொடர் தோல்விப் படங்கள் வெளியாகின. இதனை ஈடு செய்ய தனது ஹீரோ இமேஜை மாற்றி அதில் நகைச்சுவைத் தன்மையை இணைத்துக்கொண்டார் சத்யராஜ். காமெடி கதாபாத்திரங்கள் மட்டுமில்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனக்கு ஒரு  புது அடையாளத்தைக் கொடுத்தார் சத்யராஜ்.  ராஜா ராணி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், நண்பன், என இவர் நடித்த கதாபாத்திரங்களை ரசிகர்கள் மனதில் நிலைக்க வைத்தார் சத்யராஜ். 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு கலைஞராக திகழ்ந்து வருகிறார் சத்யராஜ்