சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை பார்த்த நடிகர் சரத்குமார் படம் குறித்து கூறிய கருத்தை அவரது மனைவி ராதிகா சரத்குமார் பகிர்ந்துள்ளார்.
சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிதாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படக்குழு தரப்பில் வெளியான வசூல் தகவலின்படி, நான்கு நாட்களில் உலகளவில் ரூ.150 கோடியை படம் கடந்துள்ளது.
படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நடிகை ராதிகா சரத்குமார் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து திரையரங்கில் படத்தை பார்த்த அனுபவத்தையும் அவர் குறிப்பிட்டார்.
சரத்குமார் கொடுத்த ரியாக்ஷன்
ராதிகா பேசுகையில், "இயக்குநர் வெங்கி இந்தப் படத்தின் கதையை ஒவ்வொரு காட்சியாக சொல்லும் போது அவரிடம், 'இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாரா?' என கேட்டேன். அவர் இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார் என என்னிடம் சொன்னார்."
“இந்தப் படத்தை அனைவரும் பார்த்து இருக்கிறார்கள், ரசித்திருக்கிறார்கள். பல்வேறு விமர்சனங்களும் வந்திருக்கின்றன. அது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தை நானும், சரத் சார் திரையரங்கில் பார்த்தோம். அவர் எந்த படத்தை பார்த்தாலும் ஏதாவது குறையை கண்டுபிடித்து அதனை இப்படி செய்திருக்கலாம்.. அப்படி செய்திருக்கலாம்.. என விமர்சனம் செய்வார். ஆனால் இந்த படத்தை பார்த்தவுடன் ‘ஐ லவ் திஸ் மூவி. நன்றாக இருக்கிறது’ என்றார்” என்றார்.
மேலும் படத்தின் கதைக்களம் குறித்தும் ராதிகா பாராட்டு தெரிவித்தார். “இந்தப் படத்தில் ஹீரோவிற்கு அவர்களுடைய அம்மா தான் உலகம். அம்மா உயிருடன் இருக்கும் வரை வேறு யாருடனும் பழகமாட்டார். ஆனால் அம்மா உயிரிழந்த உடன் அவருக்குள் ஏற்படும் அதிர்ச்சி... அடுத்த உறவுகளை நோக்கிய அவரது பயணம்.. இந்த காட்சியில் வெங்கியை மனதார பாராட்டுகிறேன்” என்று அவர் கூறினார்.
