தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக தன் பயணத்தைத் தொடங்கி, வெற்றி நாயகனாக பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கி சுப்ரீம் ஸ்டாராக கொண்டாடப்படும் சரத்குமார் (Sarathkumar) இன்று தன் 70வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.


சரத்குமார் பிறந்தநாள்


சினிமா, அரசியல் தளம் என இன்று சரத்குமார் பயணித்தாலும், தன் ஆஜானுபாகுவான கட்டுக்கோப்பான உடலமைப்பு, ஆக்‌ஷன் படங்கள் ஆகியவற்றால் கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த சரத்குமார்,   90களில் தொடங்கி சினிமா, நடிகர் சங்கம் என டாப் கியரில் ஒரு பக்கம் பயணித்தார். மறுபுறம் நடிகை ராதிகாவை கடந்த 2001ஆம் ஆண்டு சரத்குமார் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த நட்சத்திரத் தம்பதிக்கு ராகுல் என்ற 20 வயது மகன் உள்ளார்.


ரேயான் மிதுன் பதிவு




மேலும் தங்கள் முன்னாள் திருமணத்தில் பிறந்த மகள்கள் ரேயான் மிதுன் (Rayane Mithun), நடிகை வரலட்சுமி சரத்குமார் என இவர்கள் அனைவரும் நல்ல புரிதல் மற்றும் அன்புடன் ஒற்றுமையான குடும்பமாக வலம் வந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர். குறிப்பாக ராதிகாவின் முன்னாள் கணவருக்குப் பிறந்த ரேயான் மிதுன், நடிகர் சரத்குமாரை வளர்ப்புத் தந்தையாகக் கருதாமல் தொடர்ந்து தன் இணையில்லா அன்பை வெளிப்படுத்தி இணையத்தில் பதிவிட்டு இதயங்களைப் பெற்று வருகிறார். சரத்குமாரும் ரேயானை தன் சொந்த மகளாகப் பார்த்து அன்பு பாராட்டி வரும் நிலையில் ஒவ்வொரு தந்தையர் தினத்திலும் ரேயான் சரத்குமாருக்கு தவறாமல் வாழ்த்தி பதிவிட்டு வருகிறார்.


வாழ்வின் முக்கியமான தருணத்தில் வந்த அப்பா


அந்த வகையில், இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடும் தந்தை சரத்குமாருக்கு ரேயான் உணர்ச்சிகரமான வாழ்த்துப் பதிவினைப் பகிர்ந்துள்ளார். சரத்குமார் உடன் தான் இணைந்திருக்கும் வீடியோவினைப் பகிர்ந்து “மிக முக்கியமான தருணத்தில் எங்கள் வாழ்வில் அடியெடுத்து வைத்த மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் அன்பும் வழிகாட்டுதலும் எனக்கு உலகம். இவ்வளவு சிறப்பான அப்பாவாக இருப்பதற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.


 






நெட்டிசனிடம் காட்டம்


ரேயானின் இந்தப் பதிவு வழக்கம்போல் ஒருபுறம் இதயங்களை அள்ளி வரும் நிலையில், மறுபுறம் இணையவாசி ஒருவர் எழுப்பிய கேள்வி ரேயானை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.


“சரத்குமார் உங்களை அப்பா என தன்னைக் கூப்பிட வைத்ததில் மகிழ்ச்சி. ஆனால் உங்கள் சொந்த தந்தையை ஏன் நீங்கள் கண்டுகொள்வதில்லை? அவர் உங்களை மிஸ் பண்ணலாம் இல்லையா.. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என கமெண்ட் செய்திருந்தார். இந்தக் கேள்வியால் கடுப்பான ரேயான், எங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது பற்றி உங்களுக்குத் தெரியாது.. உங்களுக்கு இது பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை” எனக் காட்டமாக பதிலளித்துள்ளார்.




ரேயான் - சரத்குமார் போலவே நடிகை வரலட்சுமி சரத்குமாரும் ராதிகாவும் நல்ல புரிதலையும் அன்பையும் கொண்டு தோழிகள் போல் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.