சந்தோஷ் நாரயணன் இசையில் பாடலாசிரியர் அறிவு வரிகளில் உருவாகியிருக்கும் பாடல் நாளை வெளியாக உள்ளது. 


பிரபல இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், கைசர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்  ‘அனல் மேலே பனித்துளி’. நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையில் உருவாகிவரும் இந்தப்படத்தின் இராண்டாம் பாடலான 'கீச்சே கீச்சே’பாடல் நாளை வெளியாக இருக்கிறது. இந்தப்பாடலை சுயாதீன இசைக்கலைஞரும், பாடலாசிரியருமான அறிவு பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். இந்தப்பாடலை பிரபல நடிகரான ஆர்யா நாளை மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார். 


 






திரையுலக இசையமைப்பாளர்களில் மிகவும் பிரபலமான இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அவர் இசையமைத்த பீட்ஸா, சூது கவ்வும், வில்லா, ஜிகர்தண்டா, மெட்ராஸ் என பல படங்களில் பல இனிமையான பாடல்கள் மூலம் சினிமா ரசிகர்களை தன் வசம் இழுத்தவர். அந்த வகையில் இவரது இசையில்,தனது மகள் தீ பாட, சுயாதீன இசைக்கலைஞரான அறிவின் வரிகளில் என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது.


 


                             


இந்தப்பாடலை அண்மையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பாடகி தீயும், கிடாக்குழி மாரியம்மாளும் பாடினர். அதில் உடன் பாடிய அறிவு பங்கேற்வில்லை. இதனிடையே அவர் புறக்கணிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த  நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “  ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலுக்கு எனக்கு யாரும் டியூன் தரவில்லை அந்தப் பாடலில் உள்ள வார்த்தைகளில் ஒன்றில் கூட பிறர் சொன்னது இல்லை. ’எஞ்சாய் எஞ்சாமி’ - நான்  மியூஸிக் கம்போஸிங் செய்து, பாடல் வரிகளை எழுதி, பாடி, அந்தப் பாடலிலும் பர்ஃபாம் செய்திருந்தேன். இதற்காக ஆறு மாதங்கள் உறங்காமல் இருந்திருக்கிறேன். இப்போது இருக்கும் ’எஞ்சாய் எஞ்சாமி’ பாடலுக்கு பின், என்னுடைய உறங்காத இரவுகளின் உழைப்பு இருக்கிறது.


 






இது வெற்றிகரமான டீம் ஒர்க் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நம் முன்னோர்களின் மாண்பை பாடல்கள் மூலம் நாம் உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம்; பாடல்கள் மூலம் அவர்களின் மாண்பை தாங்கி நிற்கிறோம். நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, உங்களிடம் உள்ள பொக்கிஷத்தை யார் வேண்டுமாலும் தட்டிப் பறிக்கலாம்,. ஆனால், விழித்திருக்கும்போது, உங்களிடமிருப்பதை யாராலும் பறித்துவிட முடியாது. ஜெய் பீம்!” என்று பதிவிட்டு இருந்தார்.


இதற்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். 



அந்த விளக்கத்தின்  சுருக்கம்:


தீ, அறிவு மற்றும் நான் மூவரும் ஒன்றாக இணைந்து இந்த பாடலுக்காக இசையமைத்து, வசனம் எழுதி பாடவும் முடிவு செய்தோம். தீ மற்றும் அறிவு இந்த பாடலை பாட ஒப்புக்கொண்டு அதன் செயல்பாட்டை துவங்கினர். அவருடன் இணைந்து தீ பல இடங்களில் இசையமைக்கவும், அறிவு பாடல் வரிகளையும் எழுத ஒப்புக்கொண்டனர். மீதம் உள்ள பகுதிகளுக்கும், அறிவு பாடும் பகுதிகளுக்கும் நான் இசையமைத்தேன். 


இந்த தருணத்தில் காக்கா முட்டை, காதல் விவசாயம் போன்ற படங்களை இயற்றிய இயக்குனர் மணிகண்டனுக்கு நன்றி. என்ஜாய் எஞ்சாமி பாடலின் அடிப்படையும், கலாச்சாரமும் அவருடைய திரைப்படமான "கடைசி விவசாயி" படத்தில் இருந்து தான் ஈர்க்கப்பட்டது. 


 






பாடலில் இடம் பெற்ற ஒப்பாரி வரிகளுக்கு அரக்கோணத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் தாத்தா பாட்டிகளின் பங்களிப்பு. அவர்களின் பணியை கௌரவித்த அறிவுக்கு நன்றிகள். பந்தலிலே பாவக்காய் தான் எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரியமான ஒப்பாரிகளில் ஒன்றாகும். இப்பாடல் 30 மணி நேரத்திலேயே முடிக்கப்பட்டது. படப்பிடிப்பிற்கு முன்பு சில மணிநேரங்களே இருந்ததால் எங்கள் செயல்பாடுகளும் விரைவாக இருந்தன. 


இந்த பாடலின் வருமானம் மற்றும் உரிமைகள் அனைத்தையும் தீ, அறிவு மற்றும் நான் சமமாக பகிர்ந்து கொள்ளப்பட்டதையும் நான் வெளிப்படையாக கூற விரும்புகிறேன். எனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தளங்களிலும் பாரபட்சமின்றி அவர்களுக்கும் வரவு வைத்துள்ளேன். என்ஜாய் என்ஜாய் பாடல் வெளியீட்டு விழாவில் அறிவு பற்றிய என்னுடைய பேச்சு அதற்கு சாட்சி. 


2022ல் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழிச்சியில் தீ மற்றும் கிடக்குழி மாரியம்மாளின் இந்த பாடலின் போது அறிவு இல்லாதது வருத்தம். அறிவு வேறு ஒரு நாட்டில் நிகழ்ச்சியில் பங்கேற்க நேர்ந்ததால் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை. அறிவு ஒரு அற்புதமான கலைஞன். இயக்குனர் வெற்றிமாறனின் "அனல் மேல் பனித்துளி" திரைப்படத்தில் என்னுடைய இசையமைப்பில் " கீச்சே கீச்சே" பாடல் ஒன்றை பாடியுள்ளார் அறிவு” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்தப்பாடலைத்தான் நாளை ஆர்யா வெளியிட இருக்கிறார்.