நடிகை சமீரா ரெட்டி தான் நடிக்க வந்த தொடக்க காலக்கட்டத்தில் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க தினம் ஒரு இட்லி மட்டுமே சாப்பிட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். 

அறிமுகம்

தமிழில் 2008ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான  'வாரணம் ஆயிரம்' படம் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழில் தன் முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களைக் கட்டிப்போட்ட சமீரா ரெட்டி மறுபுறம் தான் முதன்முதலில் அறிமான இந்தி சினிமா உலகிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

2002ஆம் ஆண்டில் வெளியான மைனே தில் துஜ்கோ தியா எனும் இந்தி திரைப்படம் மூலம் அறிமுகமான சமீரா ரெட்டி, பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார். கடந்த 2003ஆம் ஆண்டில் வெளியான தர்ணா மனா ஹை, 2004ஆம் ஆண்டில் வெளியான முசாஃபிர், 2005ஆம் ஆண்டில் வெளியான ஜெய் சிரஞ்சீவா போன்ற படங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர். 

வாரணம் ஆயிரம் படத்தின் தமிழ் சினிம ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்த சமீரா,  வேட்டை, வெடி, நடுநிசி நாய்கள் போன்ற படங்கள் மூலம் சூர்யா, விஷால், மாதவன் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

திருமண வாழ்வு

 தொடர்ந்து 2014ஆம் ஆண்டு தொழிலதிபர் அக்‌ஷய் வர்தே என்பவரைத் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். சமீராவுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்  சமூக வலைதளங்களில் சமீரா ரெட்டி படு ஆக்டிவாக இருந்து வருகிறார். 

தன் மாமியாருடன் ஈகோ பிரச்னைகளின்றி ஜாலியான ரீல்ஸ் பதிவிடுவது, தன் நரை முடி பற்றியும், தான் ஒரு நடிகை என்பது பறியும் கவலை கொள்ளாமல் இயற்கையாக, பாசாங்கின்றி புகைப்படங்கள் பகிர்வது என இன்ஸ்டாவில் தன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் சமீரா.

ஒரு நாளைக்கு ஒரு இட்லி சாப்பாடு!

இந்நிலையில், முன்னதாக தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், தான் நடிக்க வந்த தொடக்க காலத்தில் உடல் எடை அதிகரிக்காமல்  இருக்க தினம் ஒரு இட்லி சாப்பிட்டு வந்ததை  நினைவு கூர்ந்துள்ளார் நடிகை சமீரா ரெட்டி.

"10 ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் சர்ஜரி, மார்பகம் மாற்றியமைக்கும் சிகிச்சை,  மூக்கு அல்லது எலும்பு அமைப்பை மாற்றுவது என பைத்தியக்காரத்தனமான கட்டம் என் வாழ்வில் இருந்தது .  மேலும் மார்பகத்தை மாற்றியமைக்கும் செயலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

பல முறை நான், 'இதைக் கட்டாயம் செய்யவேண்டுமா? இது தான் விதிமுறையா?' என்றெல்லாம் எனக்கு நானே கேள்வி எழுப்பிக் கொண்டேன். ஏனெனில் இது மிகவும் வெளிப்படையாகப் பேசப்பட்டது மற்றும் ஒரு நடிகராக நான் அதைச் செய்ய வேண்டுமா என்று கேள்வி எழுப்பினேன். ஆனால் அன்று அதை நான் செய்யவில்லை. அதற்காக கடவுளுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

போஸ்ட் பார்ட்டம் (postpartum)

பிரசவத்திற்குப் பின்னான போஸ்ட்பார்ட்டம் பிரச்சனைக்குப் பின் என்னை என்னை வழிநடத்தும் யாரும் இல்லாதபோதுதான் என்னை அப்படியே நானே ஏற்றுக்கொள்ளத் தொடங்கினேன். 

எனது உடல், தொழில், வெற்றி,  தாய்மைக்குப் பிறகு நான் எவ்வளவு விரைவாக மீண்டு வர முடியும் என்பன பற்றி யோசித்து நான் மிக மோசமான உணர்ந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் உண்மையில் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டேன், நான் யாருடனும் பேசவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.