தென்னிந்திய சினிமாவின் குயின் என கொண்டாடப்படும் நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்னர் மையோசிடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை மேற்கொண்டு தற்போது சகஜ நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமந்தா மிகவும் விரும்பி நடித்த 'சாகுந்தலம்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் புரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். படத்தின் புரோமோஷன் சார்ந்த நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை  சமந்தா தனது கம்பேக் குறித்தும் அவர் கடந்து வந்த கடுமையான நேரம் குறித்தும் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.



 


எனக்கு கிடைத்த எனர்ஜி :


நடிகை சமந்தாவிற்கு ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது என்பது மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். அவர் ஆக்ஷன் காட்சிகள் மீது எத்தனை பிரியம் கொண்டவர் என்பது அவரின் நடிப்பில் வெளியான 'யசோதா' திரைப்படம் மூலம் நிரூபனமானது. ஒரு சிறிய பிரேக் எடுத்து கொண்டவர் மீண்டும் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது அவருக்கு ஒரு புத்துணர்வை கொடுத்ததாக தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை, வீட்டில் ஓய்வு இதன் மூலம் எளிதில் மையோசிடிஸ் பாதிப்பில் இருந்து வெளி வந்து விடலாம் என நினைத்தேன் ஆனால் உண்மையில் நான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொள்ள தொங்கிய பிறகு தான் மிகவும் அதிகமாக தேறி இருப்பதாக தோன்றுகிறது. எனக்கு பிடித்த விஷயத்தை செய்யும் போது எனக்கு அதிகமான சக்தி கிடைப்பதாக உணர்கிறேன். சிட்டாடல், குஷி இப்படி இரண்டு திரைப்படங்களிலும் மாறி மாறி படப்பிடிப்பு ஒருபுறம் இருந்தாலும் 'சாகுந்தலம்' புரோமோஷன் மறுபுறம் என மிகவும் பிஸியான ஷெட்யூல் இருந்தாலும் என்னால் அதை மேனேஜ் செய்ய முடிகிறது. இதற்கு எங்கிருந்து எனக்கு எனர்ஜி கிடைக்கிறது என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது என்றார்.   


பர்ஃபெக்ஷன் அர்த்தம் இப்போது புரிந்தது : 


இதற்கு முன்னர் நான் அனைத்தையும் எனது கண்ட்ரோலில் இருக்க வேண்டும் எல்லாமே பர்ஃபெக்ஷனாக இருக்க வேண்டும் என்றே நினைப்பேன். ஆனால் மையோசிடிஸ் பாதிப்பு வந்த பிறகு எனக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள். நான் சாப்பிடுவது, ஒர்க் அவுட் செய்வது என அனைத்திலுமே பர்ஃபெக்ட்டாகவே இருப்பேன் அப்படி இருக்கையில் எனக்கு எப்படி இந்த பிரச்சனை வந்தது தெரிய வந்த ஆரம்ப காலகட்டத்தில் அதிகமாக கோபப்பட்டேன். ஏன் என்னால் இதில் இருந்து வெளிவர முடியவில்லை என ஏகப்பட்ட கேள்விகள், எரிச்சல் எல்லாம் இருந்தன. எனவே இந்த இடைவேளையில் நான் மிகவும் பொறுமையாக இருக்க கற்று கொண்டேன். பர்ஃபெக்ஷன் என்பது நம் வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் என்றுமே கடைபிடிக்க முடியாது. நமது வாழ்க்கையை எப்படி சந்தோஷமாக நகர்த்துகிறோம், நமக்கு பிடித்த விஷயங்களை செய்வது தான் பர்ஃபெக்ஷன் என இப்போது தான் எனக்கு புரிந்தது' என்றார் சமந்தா.