தன்னை விமர்சித்த தெலுங்கு சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர் சிட்டி பாபுவுக்கு பிரபல நடிகை சமந்தா கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். 


படுதோல்வியடைந்த சாகுந்தலம்


தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, தனது காதல் கணவர் நாக சைதன்யாவுடனான மணமுறிவுக்கு பிறகு படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக தனி ஹீரோயின் கதைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்தாண்டு அவர் நடிப்பில் யசோதா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 


இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி குணசேகர் இயக்கிய சாகுந்தலம் படம் வெளியானது.  காளிதாசர் எழுதிய புராணக் கதையான அபிஞான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான தோல்வியை தழுவியது. 


அதேசமயம் இந்த படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் அனைவரும் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் படத்தின் ரிசல்ட் நெகட்டிவ் ஆக அமைந்ததால் சமந்தா ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த படத்தின் ப்ரோமோஷனின் போது சமந்தா கண்கலங்கினார். இதேபோல் யசோதா பட ப்ரோமோஷனின் போதும் சமந்தா அழுதார். 


சமந்தாவை விமர்சித்த சிட்டிபாபு 


இதனை குறிப்பிட்டு பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு சமந்தாவை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் நேர்காணல் ஒன்றில், “நடிகை சமந்தாவின் முன்னணி ஹீரோயின் என்ற கேரியர் முடிந்துவிட்டதாகவும், அவர் தன்னுடைய படத்தை விளம்பரப்படுத்த மலிவான தந்திரங்களைச் செய்கிறார். ஸ்டார் ஹீரோயின் அந்தஸ்தை இழந்ததால் தனது வாழ்வாதாரத்திற்காகவே சமந்தா புஷ்பா படத்தில் ஊ ஆண்டவா பாடலில் நடித்தார்.


இப்படிதான் தனக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் சமந்தா பயன்படுத்தி வருகிறார். யசோதா , சாகுந்தலம் பட ப்ரோமோஷனில் கண் கலங்கி பேசி படத்தை வெற்றி பெற முயற்சி செய்தார்.  எல்லா நேரமும் சென்டிமென்ட் வேலை செய்யாது. கேரக்டர் நன்றாக இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள்” என தெரிவித்திருந்தார். இது திரையுலகினர் இடையேயும், ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இந்நிலையில் சிட்டிபாபுவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் “காதுகளில் முடி எப்படி வளரும்” என்பதை கூகுளில் தேடிய ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார். தயாரிப்பாளர் சிட்டிபாபுவுக்கு காதில் முடி இருக்கும். அதனை குறிப்பிட்டு அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் சமந்தா கருத்து தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.