Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க முடிவெடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 

 

பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை தக்க வைத்தவர். தொடர்ந்து சூர்யா, விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானார். அண்மையில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து சமந்தா நடித்த குஷி படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதற்கிடையே, தி ஃபேமிலி மேன் 2 என்ற வெப் தொடர் மூலம் இந்தி திரையுலகிலும் அறிமுகமானார். தற்போது சென்னை ஸ்டோரிஸ் என்ற ஆங்கில படத்தில் நடித்து வருகிறார். 

 

நடிப்புக்கு இடையே தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜூனாவின் மகனுமான நாகா சைதன்யாவை காதலித்து வந்த சமந்தா 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எனினும், நான்கு ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் விவாகரத்து எடுத்து பிரிந்தனர். திருமண வாழ்க்கை முறிவுக்கு பிறகு அதிலிருந்து வெளியே வர சிரமப்பட்ட சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற பாதிப்பு ஏற்பட்டு மேலும் அதிர்ச்சியை அளித்தது. 

 

உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி சமந்தா பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவின. சிகிச்சைக்கு இடையே ஒப்பந்தமான சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்களில் நடித்த சமந்தா, அண்மையில் அமெரிக்கா மற்றும் பூடான் சென்று மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்து கொண்டார். நண்பர்களுடன் பிடித்த இடங்களுக்கு சுற்றுலா சென்றதையும் பகிர்ந்து கொண்டார். 

 

இந்த நிலையில் சமந்தா குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நடிகை சமந்தா இரு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு குழந்தைகளுக்கும் தனித்த பெற்றோராக இருந்து வளர்க்க சமந்தா விரும்புவதாகவும் கூறப்படுகிறது. பிரத்யுஷா என்ற தொண்டு நிறுவனத்திற்கு உதவி செய்து வரும் சமந்தா அங்கிருந்து இரு குழந்தைகளை தத்தெடுக்க முடிவெடுத்துள்ளதாக கூறபப்டுகிறது. 

 

நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததற்கு பிறகு சமந்தாவை திருமணம் செய்துகொள்ள அவரது பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், திருமணம் பேச்சுக்கே இடமில்லை என்று கறாராக கூறி வரும் சமந்தா தற்போது குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடிவெடுத்துள்ளார்.