சேலத்தில் தனியார் கல்லூரி மாணவிகள் இடையே பகாசூரன் படக்குழு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி, ”செல்வராகவன், நடராஜன் நடித்துள்ள பகாசூரன் திரைப்படம் பிப்ரவரி 17 ஆம் தேதி திரையரங்கிற்கு வரவுள்ளது. இதற்காக கல்லூரிகளில் மாணவிகள் இடையே செல்போன் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். வீடுகளில் பெண்கள் செல்போன் பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பெற்றோருக்கு தெரியவில்லை. அதில் உள்ள சிக்கல்கள், பிரச்சனைகளில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து இந்த திரைப்படத்தில் கூறியுள்ளோம்” என்றார். இதனைத் தொடர்ந்து கோவை, மதுரை, விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக கூறினார். 



தொடர்ந்து பேசிய அவர், “தொடர்ச்சியாக இயக்குனர்களை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர்களை வைத்து படம் எடுப்பதை விட இயக்குனர்களை வைத்து படம் எடுப்பது மிகவும் சுலபமாக உள்ளது. வாத்தி மற்றும் பகாசூரன் இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. படத்தின் பட்ஜெட்டை வைத்து படங்களை ஒப்பிடுவது தவறானது. ஒரு படத்தை அது கூற வரும் கருத்துக்களை வைத்து மட்டுமே ஒப்பிட வேண்டும். அந்த வகையில் பகாசூரன் திரைப்படம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து படமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் வாத்தி திரைப்படமும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற சிறந்த சமூக கருத்தோடு எடுக்கப்பட்டுள்ளது. சினிமாவில் ஒரு படத்தை திரையிடுவது சாதாரண விஷயம் அல்ல, இயக்குனர் செல்வராகவன் ஓடிடி தளத்தில் படம் வெளியாகி இருக்கிறது. ஆனால் கதாநாயகராக நடித்து திரையரங்கில் வெளியாகும்  முதல் படம் இதுவே.  இதனால் திரையரங்கம் கிடைப்பதற்கு கால தாமதம் ஆனது” என்றார். தொடர்ந்து உண்மை கதை சம்பவங்களை தழுவி படமாக எடுப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், திரௌபதி திரைப்படத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக உண்மை சம்பவங்களை வைத்து படம் எடுப்பது போன்று அமைந்து வருகிறது. எனது அடுத்த படமும் ஒரு உண்மை சம்பவத்தை வைத்து படமாக உள்ளது, மக்களுக்கு தெரியாத விஷயத்தை மக்களுக்கு படமாக கொடுப்பது மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். எனவே உண்மை சம்பவங்களை வைத்து படம் ஏற்றி வருகிறேன் என்றார்.



மேலும், “சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு முறையும் தன்னைக் குறித்து வரும் கருத்துக்களுக்கு அமைதியாக இருந்தால் அது உண்மையாகிவிடும் என்பதனால் தொடர்ச்சியாக ஒரு சில கருத்துக்களுக்கு பதில் அளித்து வருகிறேன். திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பெயர் வைப்பதும், காட்சிகளை வைப்பதும் மக்களை கவர்வதற்கு அல்ல. மக்களுக்கு ஒரு விதமான புரிதலை ஏற்படுத்த, மக்களுடன் இணைப்பதற்கும், படம் பெயர் குறித்து பேசும் பொருளாக வேண்டும் என்பதற்காக மட்டும்தான், பிரபலமாக்குவதற்கு அல்ல. சிவன் பாடலை திரைப்படத்தில் வைப்பது நிறைவாக உள்ளது. சமுதாயத்தில் என்னை சுற்றி உள்ள விஷயங்களை படம் ஆக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். திரெளபதி படத்திற்கு பின்னர் பதிவாளர் அலுவலகத்தில் மூன்றாம் நபர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும் என்பதையும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளது. திரௌபதி படத்தினால் இது நடந்தது என்று நான் கூறவில்லை. ஆனால் திரைப்படம் வெளியான பிறகு சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பகாசூரன் படமும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். தன்னை வைத்து பாஜக, பாமக வளரவில்லை, ஏற்கனவே அவர்கள் பெரிய அளவில் வளர்ந்து விட்டனர். எனவே என்னை வைத்து வளர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை” என்று கூறினார்.