ராமாயணம்
தங்கல் திரைப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிக பிரம்மாண்டமாக ராமாயணத்தை படமாக்கி வருகிறார். இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.ஜி.எஃப் பட புகழ் யாஷ் ராவணனாகவும், பாபி தியோல் அனுமனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக சில நாட்கள் முன்பு தகவல் வெளியானது.
இப்படம் பற்றிய இப்படி அடுத்தடுத்த தகவல்கள் வெளியானாலும் படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த வித அதிகாரப் பூர்வமான தகவலுல் வெளியாகவில்லை.மேலும் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இப்படியான நிலையில் ராமாயண் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவியின் புகைப்படங்கள் வெளியாகி இந்தத் தகவல்களை உறுதிபடுத்தியுள்ளன.
ராமராக ரன்பீர் கபூர் மற்றும் சீதையாக சாய் பல்லவி இருக்கும் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
மொத்தம் மூன்று பாகங்களாக இந்தப் படத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்கள். இதில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் ஜூலை வரை எடுக்கப்பட இருப்பதாகவும், அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அமரன்
சாய் பல்லவி தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அமரன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
மேலும் படிக்க : Oru Nodi Review : சூப்பர் ட்விஸ்ட் இருக்கு.. ஒரு நொடி படத்தின் விமர்சனம் இங்கே!