இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் தற்போது ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹைதராபாத்தின் முக்கியப் பகுதியான மாதாப்பூர் பாலத்துக்கு அருகே சாய் தரம் தேஜ் சென்ற இருசக்கர வண்டி நிலைதடுமாறிச் சரிந்து விபத்துக்குள்ளானது. ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் எதுவும் பலத்த அடிபடவில்லை என்றாலும் வண்டி நிலைதடுமாறியதால் சாய் தரம் தேஜின் உடலில் மற்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. 


இந்நிலையில் அவருக்கு விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதில் சாய் தரம் தேஜ் அதிவேகத்தில் சென்றதே விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. அவர் பாலத்தில் பயணம் செய்தபோது வேகத்தை குறைத்திருக்க வேண்டும். அந்த பாலத்தில் அனுமதிக்கப்பட்ட வேகம் என்பது 30-40 கிமீ தான். ஆனால் சுமார் 80-100 கிமீ வேகத்தில் சாய் சென்றுள்ளார். அந்த அதிவேகமே அவரை விபத்துக்குள் சிக்கவைத்துள்ளது. அதிவேகத்தில் முன்னால் சென்ற வாகனத்தை கடந்து செல்ல முயற்சி செய்த போது பிரேக் அடித்ததால் அவர் பைக் ஸ்கிட் ஆகியுள்ளதே விபத்துக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.


man vs wild : காட்டுக்குள் சாகசம்.. பியர் கிரில்ஸுடன் பயணம் செய்யும் பிரபல நடிகர்!




முன்னதாக, சாலையில் நிலைதடுமாறி விழுந்த சாய் தரம் தேஜை காப்பாற்றியது யார் என அனைவரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அப்துல் என்பவர் குறித்து தெலுங்கு செய்தி சேனல்கள் ஒளிபரப்பின. சாலையில் அடிபட்டுக்கிடந்த சாய் தரம் தேஜை காப்பாற்றியது அப்துல்தான் எனக் கூறப்படுகிறது. அமீர்பெட் யெல்லரெட்டிகூடா பகுதியை சேர்ந்த அப்துல் ஐதராபாத் சி.எம்.ஆர். கல்லூரியின் பார்க்கிங் பகுதியில் பணிபுரிபவர். சம்பவம் நடந்த அன்று தற்செயலாக அப்துல் அதே மாதாபூர் பகுதி வழியாக நிஜாம்பெட் வரை சென்றுள்ளார்.


சாய் தரம் தேஜ் சென்ற வண்டி நிலைகுலைந்து விழுவதைப் பார்த்ததும் உடனடியாக போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸுக்கு அழைத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சாய் தரம் தேஜூடன் ஆம்புலன்ஸில் ஆஸ்பிடல் வரை சென்றுள்ளார். இந்த விவகாரமும் இணையத்தில் வேகமாக பரவ அவருக்கு ரசிகர்கள் பலரும் நன்றியை தெரிவித்தனர்.




இதற்கிடையே சாய் தரம் தேஜை மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்த சிரஞ்சீவி, அவர் நலமாக இருப்பதாகவும் ரசிகர்கள் அச்சப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை என்றும் பதிவிட்டுள்ளார். சிரஞ்சீவி தவிர ராம் சரண், உபாசனா, சீரஞ்சீவி தம்பி மகள் நிகாரிகா உள்ளிட்டவர்களும் மருத்துவமனைக்குச் சென்று சாய் தரம் தேஜ் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனர்.சாய் தரம் தேஜ் நடிப்பில் ‘ரிப்பப்ளிக்’ என்னும் திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.