பிரபல தெலுங்கு நடிகரும், பவன்கல்யாணின் மருமகனுமான சாய் தரம் தேஜ் பைக் விபத்தில் சிக்கினார். ஆனால், ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர் லேசான காயங்களுடன் தப்பினர்.


நேற்றிரவு துர்கம்செருவு கேபிள் பாலத்திற்கு அருகில் சாய் தரம் தேஜ் பைக் ஓட்டிக் கொண்டிருந்தார். விலையுயர்ந்த வெளிநாட்டு பைக்கான அந்த வாகனத்தை அவர் ரசித்து ஓட்டிக் கொண்டிருந்தபோது திடீரென வாகனம் வழுக்கிவிட்டது. இதில் கீழே விழுந்த சாய் தரம் தேஜ் கைகள், இடுப்பு, முகம் என ஆங்காங்கே சிராய்ப்புகள் ஏற்பட்டன. விபத்தின் போது அவர் மது அருந்தவில்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் பெரிதாக காயமின்றி தப்பியுள்ளார்.


விபத்தில் சிக்கிய அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலிருந்து மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


விபத்து குறித்த தகவல் வெளியானதுமே, சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ், மாமா பவன்கல்யாண், உறவினர்கள் வருண் தேஜ், நிஹாரிகா கொனிடேலா, நண்பர்  சுன்தீப் கிஷன் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அல்லு அரவிந்த் மற்றும் சிரஞ்சீவியின் மனைவி சுரேகாவும் மருத்துவமனைக்கு விரைந்தனர். 


விபத்து குறித்து சாய் தரம் தேஜ் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், விபத்தில் சிக்கிய சாய் தரம் தேஜ் நன்றாக இருக்கிறார். உடல் நலம் தேறி வருகிறார். மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பில் இருக்கிறார். யாரும் கவலைப்படத் தேவையில்லை. உடல்நிலை இன்னும் கொஞ்சம் சீராக வேண்டியே அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சைகள் நடந்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் குறித்து மாதாபூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.


விபத்து குறித்து தெலுங்கு திரைப்படங்களின் தயாரிப்பாளரும், சாய் தரம் தேஜ் மாமாவுமான அல்லு அரவிந்த் கூறுகையில், "சாய் இரவு 7.30 மணிக்கு சாலை விபத்தில் சிக்கினார். அவர் இப்போது நலமாக உள்ளார். மருத்துவர்களிடம் பேசினேன். அவருக்கு தலை , முதுக்கெலும்புகளில் காயம் ஏதும் இல்லை. அவர் நலமாக இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.


சாய் தரம் தேஜ் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்கா மற்றும் அவரது கணவர் மருத்துவர் சிவ பிரசாத் ஆகியோரின் மகன் ஆவார். பிரபல டோலிவுட் நடிகர்களான நாகேந்திர பாபு மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் மருமகனும் ஆவார். இவரது தாய்வழி உறவினர்களான ராம் சரண், வருண் தேஜ், நிஹாரிகா கொனிதேலா ஆகியோரும் டோலிவுட்டில் நடிகர்கள் மற்றும் நடிகைகளாக இருக்கிறார்கள்.


சாய் தரம் தேஜ் பில்லா நவ்வு லேணி ஜீவிதம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது சமீபத்திய வெளியீடான சித்ரலஹரி திரைப்படத்தில் இவர் ஏற்றிருந்த விஜய் கதாபாத்திரம் இவர் நடித்த கதாபாத்திரங்களிலேயே சிறந்தது என்ற விமர்சனைத்தைப் பெற்றது.