பிரம்மாண்டம் என்ற சொல்லிற்கு பெயர் போன திரைப்படம் பாகுபலி . உலகம்  முழுவதும் இந்த படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிறந்த உலக சினிமாக்களின் பட்டியலிலும் பாகுபலி இடம்பிடித்தது. இந்த வெற்றிப்படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கி வரும் திரைப்படம்தான் ’ஆர்.ஆர்.ஆர்’ . ரத்தம் , ரணம், ரௌத்திரம் என்பதே இந்த படத்தின் முழுமையான பெயர். இதில் ஜூனியர் என்.டி.ஆர்  மற்றும் ராம்சரண் கதாநாயகன்களாக நடித்து வருகின்றனர். இவர்கள் தவிர ஆலியா பட், அஜய் தேவ்கன்,சமுத்திரக்கனி, ஸ்ரியா சரண் உள்ளிட்ட பல முக்கிய மற்றும் முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். 1920 ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக  கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் தயாராகி வருகிறது.





இந்நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மேக்கிங் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழு. மெய்சிலிர்க்கும்  வகையில் இருக்கும் மேக்கிங் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகுபலியை போலவே ஆர்.ஆர்,ஆர் படத்திலும் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது மேக்கிங் காட்சிகள் மூலம் தெளிவாக தெரிகிறது. இது தவிர 3 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக ஒரு பாடல் காட்சிகளை உருவாக்கவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாடல் காட்சிகள் படத்தின் கதாநாயகி ஆலியாபட்டிற்கானதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அப்படி ஒரு பாடல் உருவானால் அதுதான் இந்தியாவின் பிரம்மாண்ட பட்ஜெட் பாடலாக இருக்கும். அதில் நடித்த பெருமையும் ஆலியாவையே சேரும்.







முன்னதாக  கொரோனா இரண்டாம் அலை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என பேசப்பட்டு வந்த நிலையில், படம் திட்டமிட்டபடி வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தின் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது லைகா. திரையரங்கு வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த படம் , வெளியான குறிப்பிட்ட சில கால இடைவெளிகளில் ஒடிடி தளங்களில் வெளியாக உள்ளது. அதன்படி ஆர்.ஆர்.ஆர் படத்தின் இந்தி பதிப்பை நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கும் , மற்ற மொழிகளின் ஒடிடி வெளியீட்டு உரிமையை  ஜீ5 ஓடிடி தளத்திற்கு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை தமிழில் விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. அதேபோல தெலுங்கு மற்றும் கன்னடத்திற்கான உரிமையை ஸ்டார் தொலைகாட்சியும், இந்தியில்  ஜீ சினிமாவும், மலையாளத்தின் உரிமையை ஏசியாநெட்டும் பெற்றுள்ளன. படத்தின் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் போஸ்ட்ப்ரொடக்‌ஷன் வேலைகளை முடித்துவிட்டு, படத்திற்கான புரமோஷன் வேலைகளில் படக்குழு இறங்குவார்கள் என தெரிகிறது.